வெள்ளி, 27 மார்ச், 2020

கொரானா நன்மைகள்

கொரானா நன்மைகள் .....
====================
 * சட்டத்தால் கூட மூட முடியாத டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*குடும்பத்தோடு மட்டுமே கூடி உறவாடி, இப்பொழுது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும்  நம்முடன் இருப்பவர்கள் என எண்ணும வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*ஆரோக்கியமான வீட்டு உணவு மட்டுமே உண்ண வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*தேவையற்ற  செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது.

*அநியாயமாக தேவைக்கு அதிகமாக சேர்த்த லஞ்சம்/ கறுப்பு பணம் பொன் பொருள் பயன்தராது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும்  செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*புத்தகங்கள் படிக்க/எழுத வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*இக்கட்டான நிலையிலும்  நாம் ஓடிஓடி சேர்த்த நம் கண்முன் (சுற்றும் முற்றி பாருங்கள்)உள்ள எந்த பொருளும் பயனற்றது.
காய்கறி விவசாய பொருட்களை தவிர,
என எண்ண வைத்துள்ளது.

*எந்த இக்கட்டான கடைசி நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*எந்த கடைசி நிலையிலும் விவசாயமும் விவசாயி மட்டுமே இறையருள் படைத்த அற்புதம்.
விவசாயமே மனிதர்களை கடைசி நிலையிலும் கைவிடாது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*உலகில் நட்பை மறந்து உறவுகளை விட்டு விலகி மறந்து பொருளற்ற ஆடம்பர பொருட்களை சேர்த்தும் அவைகளால் பயனில்லை என்ற எண்ணம் ஏற்படுத்தி உள்ளது.

**சிந்தனையில் நிதானம், தர்மம், மனிதநேயம்,நேர்மை  மறந்து தறிகெட்டு சுயநல வெறிபடித்து  திரிந்த மனிதர்கள் நிதானமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.*

*ஜாதியால், மதத்தால், நிறத்தால், பணத்தால், தொழிலால் அதிகாரத்தால் உயர்ந்தவன்/தாழ்ந்தவன் யாரும் இல்லை என மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*அதர்மங்கள் தலைதூக்கும் போது மீண்டும்  வருவேன்*- என் இறைவான் சொன்ன அற்புத வரிகளை மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

கொரானாவை மன்றாடி கேட்கிறோம்..

*மனிதர்களுக்கு சிந்தனையில் மறுமலர்ச்சி செய்துவிட்டு சென்றுவிடு வந்தவழி நோக்கி.*

*மனிதனின் கெட்ட எண்ணங்களை அழித்துவிடு.  மனிதர்களை அழிக்காதே*

உங்களோடு நிந்தனையில் நானும்....

ஒரு புதுமையான, நம்பிக்கையூட்டும் உலகை நம் குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்போம்

#அரிய_வாய்ப்பு

வேலை, தொழில் என ஓய்வின்றி உழைத்த நம்மை இன்று வீட்டில் முடங்கியுள்ளது கொரோனா. நம் குழைந்தைகளிடம் நேரம் செலவிட காலம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாமாளிக்க முடிவதில்லை என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. உண்மையில் அவர்களை நாம் சமாளிக்கிறோமா அல்லது புறக்கணிக்கிறோமா? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் கைப்பேசிகளை சற்று ஒதுக்கிவிட்டு, குழந்தைகளிடம் உரையாடுங்கள், விளையாடுங்கள், நேரம் செலவிடுங்கள். உங்கள் புறக்கணிப்பு அவர்களை தனிமை மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் குழந்தைக்கு நம்பிக்கை கொடுங்கள். அவர்களின் வயதுக்கு ஏற்றார் போல் விளையாட்டுகளை சொல்லிக் கொடுங்கள். நீங்களும் ஒரு குழந்தையாக மாறிவிடுங்கள்.

ஓவியமோ, சிறு சிறு கட்டுரைகளோ எழுத ஊக்கப்படுத்துங்கள். உங்கள் குடும்ப வரலாறோ அல்லது சமூக வரலாறோ சொல்லிக் கொடுங்கள்.

உங்களை பற்றியோ அல்லது அவர்கள் படிக்கும் பள்ளியை பற்றியோ அல்லது அவர்கள் நண்பர்களை பற்றியோ என்ன நினைக்கிறார்கள் என்று எழுதி கொடுக்கச் சொல்லுங்கள்.

இதனால் அவர்களுக்கு புது நம்பிக்கையை உங்கள் மீது ஏற்படுத்தும். இது அவர்களின் எண்ணங்களை அறிய ஒரு வாய்ப்பாக அமையும். உங்களுக்கும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். இது போன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகும்.

ஒரு புதுமையான, நம்பிக்கையூட்டும் உலகை நம் குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்போம்.

21 உள்ளடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்


21 உள்ளடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்

1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். *கிட்டாதாயின் சட்டென மற.*

2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். *அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.*

3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். *விணாசே காலம் விபரீத புத்தி.*

4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். *அனுமதி ஒரு வெகுமதி.*

5.உணவும் பானங்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று  எப்போதும் நினைத்து விடாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் மறக்காமல்  கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். *ஆசைப் பட்டால் அவஸ்தை.*

6. சும்மா இருக்குறதுக்கு ஒட்டடை அடிக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஒட்டடை அடித்து விடுங்கள். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். *முந்தினால் முதலுக்கு மோசமில்லை.*

7. சும்மா இருக்குறதுக்கு ஃபேன் துடைக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஃபேன் துடைக்க ஆரம்பியுங்கள். ஏங்க ஜாக்கிரைதைங்க, பாத்து க்ளீன் பண்ணுங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான இரண்டாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். *சுத்தம் சோறு போடும்.*

8. சும்மா இருக்குறதுக்கு அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் பாத்ரூம் க்ளீன் பண்ண ஆரம்பியுங்கள். ஏங்க இதையெல்லாம் நீங்க பண்றீங்க, வேலையாள் வச்சி பண்ணிக்கலாங்க  என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான மூன்றாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். *சுத்தம் சுபம்.*

9. இப்போது சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவ துவங்குங்கள். ஏங்க, இதெல்லாம் நீங்க செய்யிற வேலையாங்க, போயி பேப்பர் படிங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு வாசகம் வரும். அது திருவாசகம். இப்போது உங்கள் மதிப்புயர்வு உறுதியாகி விட்டது. *பாத்திரம் அன்புக்கு பாத்திரம்.*

10.  அழுக்கு துணி களை சேகரித்து வாஷிங் மிஷினில் போடுங்கள். பின், இன்னும் ஏதாவது இருக்காம்மா என்று தணிந்த குரலில் கேளுங்கள். பின்னர் வாஷிங் மிஷினை இயக்கி விட்டு நாற்காலியில் அமருங்கள்.இப்போது நீங்கள் கால்மேல் கால் போட்டு தைரியமாக அமரலாம். உங்கள் மதிப்புயர்வு ஏற்கனவே உறுதியாகி விட்டதால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. *காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.*

11. இனி வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை மாடிக்கு எடுத்து சென்று கொடியில் கிளிப் போட்டு காய வையுங்கள்.இது மிக முக்கியமான செயல். தவறினால்  கஷ்டப்பட்டு கிடைத்த மதிப்புயர்வு பரமபத பாம்பிடம் சிக்கியதைப்போல் சர்ரென சருக்கி விடும். *கவனம் கவசம்.*

12. துணி காய வைத்தபின் வீட்டுக்குள் (கால்மேல் கால் போட்டு) அமர்ந்து அடுத்து  என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு டீ அன்பு கொஞ்சம் தூக்கலாக வழங்கப்படும். அசந்து விடக்கூடாது. மெல்ல எமுந்து, பெட்ஷீட், தலையனை போன்றவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த டீ வழங்கப்பட்டது என்பது பிறிதொரு யோசனையில்தான் புரியவரும். *காரணமில்லாம காரியமில்ல.*

13. சாப்பாட்டு நேரம். ஆச்சரியமாயிருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த உள்ளடங்கு காலத்துல எதுக்கும்மா இவ்வளவு சிரமம் எடுத்துக்கிறே என்று (சம்பிரதாயமாகவாவது மறக்காமல்) கூற வேண்டும். *புகழோடு தோன்றின் இகழ் இல்லை.*

14. உண்டபின் அமைதியாக  உறங்கி ஓய்வு எடுக்க அனுமதி உண்டு. வாய்திறக்க அனுமதி இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு. *ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று.*

15. உறங்கி எழுந்த பின் அற்புதமாய் ஒரு டீ வரும். நீங்கள் ஆனந்தமாய் அதை பருகலாம். அதன்பின், காயப்போட்ட துவைத்த துணிகளை எடுத்து வந்து விட வேண்டும். இதில் காலதாமதம் வேண்டாம். நீங்கள் ஆனந்தமாய் பருக வழங்கப்பட்ட டீ இதற்காகத்தான் என்பது விரைவில் புரிய வரும். *செய்கை நன்றே.*

16. இப்போது அதி தீவிரமான கண்கானிப்புக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் காய வைத்து எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். இல்லையேல் பரமபத பாம்பு வேலை நடந்து உங்கள் அறிவு கூறாக்கப்பட்டுவிடும் ஜாக்கிரதை. *முடிவே விடிவு.*

17. நீங்கள் இப்போது ஆல் பாஸ் கேட்டகரியில் உள்ளீர்கள். நிம்மதி நிச்சயம். இரவு உணவு ஏக சுவையாய் பரிமாரப்படும். எப்பிடித்தான் இவ்வளவு வேலையை இழுத்துப்போட்டு செய்றியோம்மான்னு சொல்லீட்டி ( இங்க ரிப்பீட் அனுமதிக்கப்படும்) உறங்கப் போயிரனும் நல்ல பிள்ளையாய். *புகழுரை தெளிவுரை.*

18. இந்த தினசரி யதார்த்தங்களைத்தவிர, உங்கள் கவனத்தை பரண் மேல் ஒரு நாள் இருத்த வேண்டும். *பரண் சுத்தம் பரம சௌக்கியம்*.

19. இதேபோல் அலமாரியின் மேல்  கவனம் செலுத்த வேண்டும்.அற்புத பலன் தரும். அற்புத பலன் தரும் அலமாரி சுத்தத்தை அவ்வப்போது மேற்கொள்வதால் இல்லத்தில்  ஆனந்தம்  தாண்டவமாடும். *அலமாரி அருள் மாரி.*

20. கொஞ்சம் கஷ்டமானாலும் கடினம் பாராமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, ஒவ்வொரு நாளும் வீட்டின் ஏதாவது ஒரு  மூலையை தேர்வு செய்து மூலை சலவை, அதாவது மூலையை சுத்தம் செய்ய வேண்டும். *மூலை சலவை மூளை சலவை போக்கும்.*

21. நீங்கள் அறிவாளி🤔 என்பதையோ, புத்திசாலி🥱 என்பதையோ எப்போதும் நினைவில் கொள்ளாதீர்கள். *கொண்டது கொல்லும்.*

மேலே உள்ள 21 சூத்திரங்களையும் வாழ்வின் ஒவ்வொரு  நொடியும் நினைவில் இருத்துங்கள். *சூத்திரம் சாத்திரம்*.

21 நாட்கள் மட்டுமல்ல, 21 யுகங்கள் கூட நீங்கள் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருக்கலாம்..!

*வாழ்த்துக்கள்..!*

கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை.


                   கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை.

புதுடில்லி: இந்தியாவில் முதல்முறையாக, கொரோனா வைரசின் படங்களை, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன நுண்ணோக்கி உதவியுடன் படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. தற்போது இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் வூஹானிலிருந்து, வந்த கேரள மாணவிக்கு, இந்தியாவில் முதல்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், கொரோனா வைரசின் தோற்றத்தை, அதிநவீன மின்னணு நுண்ணோக்கியின் உதவியுடன் படங்கள் எடுத்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 'சார்ஸ் - சிஓவி-2' என்ற அந்த வைரசின் படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ், கடந்த 2012ல் பரவிய 'மெர்ஸ் - சிஓவி' மற்றும் 2002ல் பரவிய 'சார்ஸ் - சிஓவி' வைரஸ்களின் தோற்றங்களை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையோடு இருங்கள்

நம்பிக்கையோடு இருங்கள்!

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

கொரோனா தாக்குதல் காரணமாக நாடு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி.

இது போலவே ஊடகத்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செய்திகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

கொரோனா தொற்றுநோய் குறித்த பயம் நம் அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக வயதானவர்கள். ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த மனஅழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் அவர்களின் நோய் கூறை அதிகமாக்கிவிடுகிறது.

அவர்களுக்கு ஒன்று சொல்வேன். பயம் வேண்டாம். நம்பிக்கையோடு இருங்கள். மகிழ்ச்சியான உங்களை வாழ்க்கை அப்படியே தொடரும். உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் உங்களைச் சிறப்பாகப் பாதுகாப்பார்கள்.

நன்றாக உறங்குங்கள். நன்றாக உண்ணுங்கள். வீண் கவலைகளை அகற்றி மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் தூக்கம் முக்கியம். ஆழ்ந்து உறங்குங்கள். உறங்க முடியாதபடி தேவையற்ற எண்ணங்கள் அலைக்கழிப்புக் கொள்வதாக இருந்தால் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம்.

சில நிமிஷங்களில் இந்த மனநிலை தானே மாறிவிடும். தேவைப்பட்டால் தண்ணீர் குடியுங்கள். அல்லது ஆழ்ந்து உறங்க முடியும் என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அது பலன் தரக்கூடியது.

இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் படுகொலை முகாமில் கூட மக்கள் ஆழ்ந்து உறங்கினார்கள்.

எந்த நம்பிக்கை இந்த உறக்கத்தைக் கொண்டு வந்தது என அவர்களிடம் கேட்டபோது நாளை நிச்சயம் நல்ல நாளாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் என்று பலரும் சொன்னார்கள். அந்த நம்பிக்கை பலரையும் உயிர்வாழச் செய்தது.

மரணத்தினை எதிர்கொள்ளும் கைதிகளாக இருந்த பெண்கள் தங்களுக்குள்ளாக இரவில் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு நாவலை வாசித்தார்கள். கதைகேட்டு உறங்கிப் போனார்கள்.

அவர்களுக்குச் சிகிச்சை அளித்த விக்டர் பிராங்கல் என்ற மருத்துவர் சொல்கிறார். நெருக்கடி நிலையின் போது உங்கள் உடலும் மனமும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு உங்களைக் காப்பாற்றும். உங்கள் உடலை பற்றி நீங்கள் அறிந்துள்ளது குறைவே.

உங்களுக்கு இந்த வாழ்க்கை எவ்வளவு நாள் அளிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள் நிச்சயம் வாழ்ந்தே தீருவீர்கள். அதில் மாற்றமேயில்லை.

அதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்

குழந்தைகளை நம்பிக்கையோடு இரு எனச் சொன்னால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.

கதைகள் சொல்ல வேண்டும். உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்ல வேண்டும்.

அதைவிடவும் வீட்டு மனிதர் எவரையாவது சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே தான் பெரியவர்களுக்கும்.
இயற்கை பேரிடர்கள்.

நெருக்கடிகளின் போது பெரியவர்கள் எளிதாக வதந்திகளை, பொய்களை நம்பிவிடுகிறார்கள். அதிலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்களை ஒரு போதும் நம்பவேண்டாம்.

சென்னை வெள்ளத்தின் போது இளைஞர்கள் இதே சமூக ஊடகத்தைக் கொண்டு நம்பிக்கையை உருவாக்கினார்கள். அது தான் இப்போதும் தேவை.

ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதியில் என்ன கடைகள் திறந்திருக்கின்றன. எந்தப் பெட்ரோல் பங்க். இயங்குகிறது. எந்தக் கடையில் என்ன கிடைக்கிறது. என்ற தகவல்களை வாட்ஸபில் தொடர்ந்து பதிவேற்றுங்கள்.

அது போலவே அவசர உதவி தேவை என்றால் அழைக்கவும் எனத் தன்னார்வ தொண்டர்கள் தங்களின் தொலைபேசி எண்களைத் தரவும்.

எல்லா ஊடகங்களும் இதற்கெனத் தனியாகப் பத்து தொலைபேசி எண்களை உடனடியாக ஒதுக்கி மக்களைக் கொரோனா பயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அதே நேரம் கொரோனா தானே என்ற அலட்சியம் வேண்டாம். இந்த வைரஸ் குறித்த செய்திகள் அச்சப்பட வேண்டியவை தான். ஆனால் பெரும்பீதி அடையத் தேவையற்றவை.

உங்கள் வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்குச் சூழ்நிலை பற்றிப் புரிய வையுங்கள். அவர்களுடன் சேர்ந்து கதை கவிதை படியுங்கள். அவர்களை அச்சப்படுத்திவிட வேண்டாம்.

உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டவராக இருந்தால் உங்களின் ஒருநாளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களில் மனதைச் செலுத்துங்கள்.

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பதைத் தவிருங்கள். விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவதே நேரத்தை கடந்து செல்ல எளிய வழி.

எதையும் படிக்க முடியவில்லை. சினிமா பாட்டு கூடக் கேட்க முடியவில்லை எனப் பலரும் புலம்புகிறார்கள். அது உண்மை.

அது போன்ற தருணத்தில் கட்டாயமாகப் படிக்கவோ படம் பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம். இசை கேட்பது மனதை ஆற்றுப்படுத்தும். மிகச்சிறந்த இசையைக் கேளுங்கள்.

தொடர்பு அறுந்து போய்விட்டது என நினைக்கும் நண்பர்களை இந்தத் தருணத்தில் தேடி அழைத்துப் பேசுங்கள். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது தான் நம்பிக்கையை உருவாக்குவதில் சிறந்த வழி.

புத்தரின் நண்பராக இருந்த அனந்தபிண்டிகன் என்பவர் நோயுற்ற நேரத்தில் புத்தர் தனது சீடரான சாரி புத்திரரை அனுப்பி அவரது நோயிலிருந்த குணப்படுத்த உதவுங்கள் என்றார்.

சார்பில் நோயாளி அருகில் போய் அமர்ந்து அவர் செய்த நற்செயல்கள். அவரது நற்குணங்கள். சந்தோஷமான நாட்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

அனந்தபிண்டிகனின் மனது நம்பிக்கை கொண்டது. நோயின் வலி குறைவதாக உணர்ந்தார்.

சந்தோஷமான நினைவுகள். சந்தோஷமான உரையாடல்களே சிறந்த மருந்து.

நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் மருந்துகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் உங்கள் நம்பிக்கை தான் உங்களைக் காப்பாற்றும்

பெரும் போரின் அழிவிலிருந்து ஏராளமான மக்கள் உயிர்பிழைத்தார்கள். ஹிரோஷிமா அணுஆயுத அழிவிலிருந்து மீண்டவர்கள் ஏராளம். இப்படிப் பேரழிவுகள் ஏற்பட்ட காலத்திலும் மனிதர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. உறுதியான மனதுடன் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இருந்தார்கள்.

முடிவில் நெருக்கடியை வென்றார்கள். அது தான் நமக்கும் தேவை.
பெண்களுக்கு இந்த மனதைரியம் இயல்பாகவே உண்டு. ஆகவே அவர்களின் உறுதுணை உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

அதே நேரம் பெண்களை இந்த நெருக்கடியிலும் கடுமையாக வீட்டுப்பணிகளைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். அவர்களின் ஆரோக்கியம் முக்கியம்.

செய்திகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க பலருக்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகள் உருவாகிறது. ஆகவே தேவைப்படும் போது மட்டும் செய்திகளைக் காணுங்கள்.

உங்களின் நலன் கருதும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் உங்களுக்கான நல்லதே செய்வார்கள். மருத்துவர்கள் உங்களைக் காப்பாற்றுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று
நம்பிக்கை வையுங்கள்
இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகரமாகக் கடந்து செல்வோம் என உறுதியாக நம்புங்கள்

நிச்சயம் நாம் மகிழ்ச்சியான உலகினை தொடருவோம்

நம்புங்கள். தைரியமாக இருங்கள். நல்லதே நடக்கும்..

காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்

காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்

காய்கறி வாங்க வெளியே போனாலே கொரனா பரவும்.

காய்கறி கடைகளில் ஏதாவது பாதுகாப்பு
இருக்குதா..???

எதையும் தொடக்கூடாது னு சொல்றாங்க.
யாராவது கேக்குறாங்களா..???

பத்து நாள் காய்கறி சாப்பிடலைனா உடம்புல ஒன்னும் ஆகிடாதுங்க. பெருசா எந்த மாற்றமும் இருக்காது. உடல் புத்துணர்ச்சி பெறும்

பருப்புலயே பத்து விதமா சமைக்கலாம்

கொள்ளு ரசம் சிறந்த ஆன்டி பயோடிக். அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை...

உப்பு பருப்பு சீரகம் போட்டு வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்...

தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்...

இட்லி தோசை + தேங்காய் சட்னி இஞ்சி போட்டு வெக்கலாம்

பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம்

வகை வகையா ரசம் வைக்கலாம் 

நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைடிஷ்கள் ஏராளம்.

சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ்
னு பெரிய லிஸ்ட்டே போடலாம்

காய்களில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முதல் இரண்டு மாசம் தாங்கும்.

இதுல எதுக்குமே தினசரி கடைக்கு போக தேவையில்லை. ஒருமுறை வாங்கி வைத்தால் போதும்.

சொகுசு வாழ்வை விடுத்து ,
குழந்தைகளுக்கு வறுமையை சொல்லித்தர பழகுவோம். நெருக்கடி நேரத்தில் வாழக்கையை சமாளிக்க கற்றுத்தர இதுமாதிரி வாய்ப்பு கிடைக்காது.

2.
*காய்கறிகள் கிடைத்தால்*

காலையில் வீட்டில் சாதம் வடியுங்கள்.. (குக்கரில் அல்ல பழைய முறைப்படி) கிடைக்கும் சுடு கஞ்சியை காலை உணவாக இஞ்சித் துவையலுடன் குடியுங்கள்..

மதியம் சிம்பிளாக இரசம் ஒரு காய் (கூட்டோ பொரியலோ) போதாததற்கு அதே இஞ்சித் துவையலும் வைத்துக் கொள்ளவும்

இரவு இட்லி, உப்புமா அல்லது சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று இட்லி எனில் 5
தோசை & சப்பாத்தி எனில் 3..

இது ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே சமைக்கும் சமையல்.!

வீட்டில் வெல்லம் இருந்தால் அதை நீருடன் கலந்து பானகம், அல்லது எலுமிச்சை ஜுஸ், கரைத்து வைத்துக் கொள்ளவும்..

முடிந்தவரை டீ குடிக்கும் அதே சூட்டில் வெந்நீர் அருந்தவும்..

பஜ்ஜி, போண்டா, வடை போன்ற ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்..

சுடுகஞ்சி போரடித்தால் சில நாட்களுக்கு மாற்றாக பிரட் & ஜாம் சாப்பிடவும்..

அசைவம் தவிர்க்க முடியாதவர்கள் மீன் குழம்பு மட்டும் வைத்து சாப்பிடவும் (10 நாட்களுக்கு ஒரு முறை)

முட்டை உபயோகித்தால் காலையில் ஃபிரேக் பாஸ்ட் அப்போது மட்டும் சாப்பிடவும்..

அதிக பட்சமாக வாரத்தில் இரு நாட்கள் முட்டை உபயோகித்தால் போதும்..

குருணை அரிசி கஞ்சி, வரகரிசி பொங்கல், சாப்பிடலாம்..

அடுப்பில்லாத சமையல் எனில் வெள்ளைப் பூசணியை தோல்சீவி அதைத் துருவி..
நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு அதை நன்கு பிழிந்தெடுத்து தயிர் ஊற்றி பிசைந்து சாப்பிடவும்.. இது தயிர் சாதத்தை விட சுவையாக இருக்கும்..

ஊறுகாய் எனில் எலுமிச்சை, நார்த்தங்காய், கோங்குரா மட்டும் தொட்டுக் கொள்ளவும்.!

கோதுமை ரவா உப்புமா சாப்பிடுவது மிகவும் உத்தமம்.!
குழந்தைகளுக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த உப்புமாவில் காரட், பட்டாணி, சிறிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு,
கொஞ்சம் இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு (பொடிசெய்து) சேர்க்கவும்..

தேங்காய் சட்னி குழந்தைகளுக்கு மட்டுமே.! பெரியவர்கள் புதினா & கொத்தமல்லி அல்லது இஞ்சி சட்னி சேர்க்கவும்..!

வேப்பிலைப் பொடியும் நல்லெண்ணெயும் இன்னும் சிறப்பு...
அப்பளத்தை பொரிக்காது சுட்டு பயன்படுத்தவும்..

பிரண்டை, சுண்டைக்காய் வத்தக் குழம்புகள் இன்னும் சிறப்பு.. முடிந்தால் அதில் இரண்டு கடுக்காயைப்..
பொடி செய்து சேர்க்கவும்.. வேப்பிலைக் கொழுந்தும் சிறிது அரைத்து வத்தக்குழம்பில் சேர்க்கலாம்..

வாரம் ஒரு முறை கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு புளிக்குழம்பு வைக்கவும்..

பூசணி, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் போட்டு கூட்டு வைப்பதும் சாலச் சிறந்தது.!

மிளகு இரசமும் எலுமிச்சை இரசமும் வாரம் முழுவதும் வைக்கலாம்.!

பாகற்காயை வட்டமாக சீவி மஞ்சள்தூள் தடவி வதங்கல் செய்யலாம்.!

தக்காளி, கத்திரிக்காயின் உபயோகம் குறைவாகவே இருக்கட்டும் (ஈஸ்னோபீலியா)

முருங்கை, அவரை, நூக்கல், பீட்ரூட், காரட், பொடி பாகற்காய், முள்ளங்கி ஆவாரம் பூ, மணத்தக்காளி, சிறுகீரை, வெந்தயக்கீரை கிடைத்தால் யோசிக்காமல் வாங்கிவிடவும்.!

சிக்கன் & மட்டன்.!!! பாவம் அந்த உயிர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழட்டுமே.!

இங்கு நான் சொன்ன அனைத்து காய்கறிகளும்..
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகள்.!

இதை வீட்டில் உங்களால் முடிந்த அளவு சமைத்து முயன்று பாருங்கள்.!

அளவோடு உண்டு நலமோடு மீண்டு வருவோம்..!

அது இன்னும் 21 ஆண்டுகள் என்றாலும்.. நம்மால் முடியாதது உலகில் யாராலும் முடியாது என எண்ணுங்கள்.!