புதன், 27 ஜூன், 2018

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு..


புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி  இயக்குநர்  கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு..
***********************************

*பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி*:

*உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்*?

*அவரது பதில்*:

*ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு, வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்*.

*தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்*. *அதோ அதுதான் உனக்கான தண்ணீர் என்று சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க*,
*உயர்சாதிக்காரர்கள்*.

*அவன் மட்டுமல்ல, அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று  நோட்டுப் புத்தகத்தை திருத்த மறுக்கிறார் ஆசிரியர்*.

*முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத்தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான்*.
*அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான்*.

*வடமொழியைப் பாடமாய் எடுத்து படிக்க விரும்பினப்போ, இந்து தர்மம், கல்விச்சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு*.

*பதினாறு வயதில் அவனுக்கு திருமணம் நடக்குது*.
*தீண்டத்தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாதுன்னு, ஒரு விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய், இரவில் நடக்குது அந்த ஏழையின் திருமணம்*.

 *இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவர் தான், இந்திய அரசியலமைப்பை வடிவமைத்திருக்கிறார்*.
*இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சுதந்திர இந்தியாவில் இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்*.
*பட்டொளி வீசி பாரதத்தின் அடையாளமாய் விளங்கும் தேசியக்கொடியை வடிவமைத்திருக்கிறார்*.

*சேறும், சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமா*?
*அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன்*
*அண்ணல் அம்பேத்கர் அவர்கள்*.
*அவரே எனக்கு பிடித்த மகாத்மா*

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் வேலை - என்ன நிலை? ஜெ.ஜெயரஞ்சன்


சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் வேலை - என்ன நிலை?   ஜெ.ஜெயரஞ்சன்

உலகமெங்கிலும் மக்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஒரு பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது. அதுவும் இந்தியாவில் கேட்கவே வேண்டாம். மக்கள்தொகை பெருக்கத்தினால் இளைஞர் பட்டாளம் நாளும் பெருகும் அதே வேளையில் அவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை. 2001-2011 ஆண்டுகளுக்கு இடையே இந்திய மக்கள்தொகையில் 15 வயது நிரம்பியோர் எண்ணிக்கை மாதாமாதம் ஏறத்தாழ 15 லட்சம் அதிகமாகிறது. இந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமீப காலங்களில் குறையப் போவதில்லை. இதில் நிறைய பேர் கல்வி நிலையங்களில் படிப்பைத் தொடர்ந்தபோதிலும் அவர்களும் விரைவில் வேலை தேடிச் சந்தைக்குள் வருகிறார்கள். இந்தியாவில் தற்போது 15 முதல் 55 வயதுக்குட்பட்டோரில் சரிபாதிப் பேர் உழைப்பாளிகள். இதே அளவை நாடு தொடர வேண்டுமெனில் மாதமொன்றுக்கு உருவாக்கப்பட வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும். அதாவது ஏறத்தாழ ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொருளாதாரம் வளரும்போதுதான் வேலைவாய்ப்பு உருவாகும் என எங்களுக்குப் படிப்பிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் நிதர்சனமாகக் காண்பது என்ன? உலகிலேயே அதி வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வார்த்தையில் மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. அதைவிடவும் கேவலம், உருவாகும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சுத்த கூலி வேலைகளே. உழைக்கும் வயதில் (15-59) உள்ள மக்கள்தொகை பெருகும் வேகத்தில் 10இல் ஒரு பங்கு வேகத்தில் கூட வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. இது ஒரு புறமிருக்க, பெண்கள் வேலைகளில் இருந்து விலகுவது போல் தெரிகிறது. உருவாக்கப்படும் வேலைகளில் பெரும்பான்மையானவை சுயதொழில் வகையையும், அன்றாடக் கூலி வகையையும் சேர்ந்தவையாக உள்ளன.

சுயதொழில் என்ற வரையறை ஒரு சிக்கலானது. உழைக்கும் வயதிலுள்ளோர் வேலை தேடுகிறேன் என்று வேலை எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. வயிற்றுப் பிழைப்பிற்கு எதையாவது செய்தே ஆக வேண்டும். ஏதோ ஒரு தொழிலை தற்காலிகமாகச் செய்யத் தலைப்படுவர். அவர்கள்தான் சுயதொழில் புரிவோரில் பெரும்பான்மையினர். ஆக, சுயதொழில் புரிவோர் அனைவரும் தொழில்முனைவோர்தான் எனக் கருதுவது தவறாகும். ஆனால், போதுமான அளவில், வாக்குறுதி அளித்த அளவில், வேலைவாய்ப்பு உருவாக்க இயலாத பாஜக, தாங்கள் தொழிலாளர்களுக்கு வேலை உருவாக்குவதற்குப் பதிலாக தொழில்முனைவோரை உருவாக்குவதாகக் கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம். அதற்குக் கடன் வழங்க ஒரு திட்டம். அதற்குப் பெயர் முத்ரா. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின் சராசரி அளவு ரூ.37,500. ஒரு நபரால் 37,500 ரூபாயை வைத்துக் கொண்டு என்ன சுயதொழில் தொடங்க இயலும்? அத்தொழிலிலிருந்து என்ன வருமானம் பெற்றுவிடுவார்? அது மட்டுமல்ல, அவரது தொழில் செழித்துப் பெருகி அவர் மற்றொருவரை வேலைக்கு அமர்த்துவார்களாம். இதன் வாயிலாக நம் நாட்டில் வேலைவாய்ப்பு பல்கிப் பெருகியுள்ளதாம். பக்கோடா வியாபாரம் இந்த நிலையில் வெளிவந்த கதைதான். ஆக, வேலைவாய்ப்பு உருவாக்கம் எனும் பொறுப்பைத் தங்களிடமிருந்து வேலையற்ற இளைஞர்களுக்குக் கைமாற்றி விட்டதுதான் இவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கிய வரலாறு. இவர்கள்தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘வேலைவாய்ப்பற்ற’ வளர்ச்சி என முழங்கியவர்கள். அதைப் பல ஊடகங்களும் தவறாமல் பேசின. இன்று எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை. ஏன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

இது ஒரு புறமிருக்க, வெளிப்படையான வேலையில்லா நிலை இந்தியாவில் குறைவு என வாதிடுகிறார்கள். பெண்கள் வேலையிலிருந்து விலகுவது அக்குடும்பங்களின் செழிப்பான நிலையினால்தான் எனவும் கூறுகிறார்கள். இந்தியாவில் வறுமை குறைந்துள்ளதால்தான் இது சாத்தியம் எனவும் கூறப்படுகிறது. தொழிலாளர்களின் கூலி வருமான உயர்வினால்தான் வறுமை குறைந்துள்ளது. ஆகவே, வீண் கவலை வேண்டியதில்லை என்பது ஒரு நிலைப்பாடு. இந்நிலைப்பாடு சரிதானா? வேலை தேடுகிறேன் என எதுவும் செய்யாமல் தொடர்ந்து வேலையில்லாமல் இருப்பது எத்தனைப் பேருக்கு சாத்தியம்? கிடைக்கும் வேலையைச் செய்வதும், ஒருவர் செய்ய வேண்டிய வேலையைப் பலரும் பகிர்ந்து செய்வதும் பிழைக்கும் வழிகள். அதனால் இவர்கள் வேலைப் பெற்றுவிட்டார்கள் எனக் கூறுவது எதைச் சேர்ந்தது? பெண்கள் வேலையை விட்டு விலகுவது சுகமாக இருப்பதற்காகவா? அதுபோன்று சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பு குறித்து இந்த விவாதம் தொடர ஒரு முக்கியமான காரணம் வேலைவாய்ப்பு குறித்த தரவுகளினால்தான். பலவிதமான புள்ளிவிவரங்கள் இந்தியாவில் உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பு, பொருளாதாரக் கணக்கெடுப்பு, வீட்டுத் தொகை சர்வேக்கள், உழைப்பாளர் சர்வேக்கள் எனப் பல தரவுகள். ஒவ்வொன்றும் ‘வேலை’ என்பதை வெவ்வேறு விதமாக அணுகுகின்றன. பெரும்பாலான வேலைகள் சுய தொழிலாகவும், அன்றாடக் கூலி வேலைகளாகவும் இருக்கும்போது ‘வேலை’ என்பதைக் கணக்கெடுப்பது பெரும் சிக்கலாகிறது. ‘வேலை’ என்றால் ஒரு பணி உத்தரவு, கால நிர்ணயம், மாதச் சம்பளம், விடுமுறை, இதர சலுகைகள் எனக் கொண்டால் வெகு சொற்பமான ‘வேலைகளே’ உள்ளன. இந்த வரையறைக்குள் வராதவர்கள் ‘வேலையில்’ இல்லை எனக் கொள்வதா? அல்லது அவர்கள் புரியும் பணியை ‘வேலை’ என எப்படிக் கொள்வது?

ஆட்சியாளர்களுக்கு எப்படியாவது தாங்கள் அளித்த வாக்குறுதியைப் போல் போதுமான வேலையை உருவாக்கிவிட்டதாகக் காட்டியே தீர வேண்டிய நிலை. அதனால், பழைய கணக்கிடும் முறைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக EPF Dataவைக் கொண்டு புது வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என ஒரு புதுக் கதையை உலவ விடுகிறார்கள். இதற்காக அவர்கள் EPF-ன் சட்டதிட்டங்களை மாற்றியதைச் சொல்வதில்லை. முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் பணிபுரிந்தால் மட்டுமே EPF கட்ட வேண்டும். அதனை 10 ஆகக் குறைத்ததால், இதுவரை 19 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்த நிறுவனங்களும் EPFன் வலைக்குள் வந்தன. இதனால் புதிதாக 19 நபர்கள் EPFக்குள் வந்தனர். இது புதிய வேலைவாய்ப்பா? இல்லையே. முன்பு அமைப்பு சாரா தொழிலாளராக இருந்தவர்கள் ஒரு வகையில் ‘அமைப்பு சார்ந்த’ தொழிலாளர்களாக மாறியுள்ளனர் எனக் கூறலாம். அவர்கள் முழுவதுமான ‘அமைப்பு சார்ந்த’ தொழிலாளர்கள் இல்லை.

இதையெல்லாம் படிக்கும்போது, வித்தைக்காரர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட பந்துகளை மேலே தூக்கிப்போட்டு ஒன்றையும் தவறவிடாமல் பிடிக்கும் சாகசத்தைக் காண்பதைப் போல் உள்ளது இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் நிலைமை. இதனை ஆங்கிலத்தில் ‘jugglery' எனக் கூறுவார்கள். பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கானவர்களின் வாழ்வு. இதில் பார்ப்பவர் கண்களைக் கட்டுவதைவிட காய்ந்த வயிற்றுக்குப் பதில் சொல்வது ஆள்வோரின் பொறுப்பு.


கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. நன்றி :மின்னம்பலம்