செவ்வாய், 29 மே, 2018

சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் பண தர்மம்!



சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் பண தர்மம்!

பா.சிவராமன்

நெட்வொர்க் 18 தொலைக்காட்சி தொழிலதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குழுமம் 15 மொழிகளில் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சி சேனல்களையும் CNBC போன்ற வணிகச் செய்தி சேனல்களையும் நடத்துகிறது. ஆங்கிலச் செய்திச் சேனல் CNN-IBNகூட இப்போது நெட்வொர்க் 18இன் பிடியில்.

கோப்ராபோஸ்ட்டின் நிருபர் புஷ்ப் ஷர்மாவின் அடுத்த ‘ஸ்டிங் பேரம்’ நெட்வொர்க் 18இன் நிர்வாகத் துணைத் தலைவர்கள் ப்ரியங்கா தத்தா மற்றும் ஜாய் சக்கரவர்த்தி ஆகியோருடன் மும்பையில். நிருபர் இந்துத்துவப் பிரச்சாரத்தின் தேவையை விளக்கி எதிர்க்கட்சிகளின் பேரைக் கெடுக்கும் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை விளக்கியவுடன், "முற்றிலும் சரி (absolutely)" என்று ஆமோதிக்கிறார் ப்ரியங்கா.

நெட்வொர்க் 18இன் திரைப்பட சேனல்களின் தொகுப்பு Viacom 18. இந்தத் தொகுப்பில் 44 சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களின் வழியாக இந்துத்துவா பிரச்சாரத்தை விளம்பரமாகக் காட்டுவது குறித்து Viacom 18இன் விளம்பரம் மற்றும் தனியார் நிகழ்ச்சி வழங்குதல் (Sponsorship) பிரிவின் தேசியத் துணைத் தலைவர் தீபக் லுத்ராவுடன் நிருபர் உரையாடுகிறார்.

Viacom 18இன் 44 சேனல்களிலும் பிரச்சாரம் செய்ய உடன்பாடு ஏற்படுகிறது. டிஜிட்டல் மீடியா வாயிலாகவும் சமூக வலைதளங்களின் வாயிலாகவும்கூட இந்துத்துவப் பிரச்சாரம் செய்யலாம் என ஆலோசனை வழங்குகிறார் தீபக் லுத்ரா.

நெட்வொர்க் 18 உயர் அதிகாரி பரோமா, உங்களது அமைப்பு சாதகமான பணி ஏதேனும் செய்திருந்தால் அது பற்றி கூறுங்களேன் என்று சொன்னதற்கு எமது அரசியல் எதிரிகளை பாகிஸ்தான் ஏஜென்ட்டுகள் எனக் காட்டுவோம் என நிருபர் கூறுகிறார். அதை பரோமாவும் ஆமோதிக்கிறார்.

அடுத்து E TVயின் விற்பனைப் பிரிவு சீனியர் மேனேஜர் அயன் பட்டாச்சார்யாவை கோப்ராபோஸ்ட் நிருபர் சந்திக்கிறார் (நெட்வொர்க் 18 அம்பானியின் கைக்கு மாறியவுடன் ஈ டிவி குரூப்பையும் வாங்கிவிட்டது). இந்துத்துவப் பிரச்சாரம் குறித்து விளக்கியவுடன் உத்தரப் பிரதேசத் தேர்தலில் இதைத்தான் செய்தோம் என்று பீற்றிக்கொள்கிறார் பட்டாச்சார்யா.

அடுத்து நெட்வொர்க் 18இன் தேசிய மார்க்கெட்டிங் தலைவர் ஹர்ஷ் வர்தன். “என்னையே வலுவான இந்து ஆதரவாளராக எடுத்துக்கொள்ளுங்கள்” என்ற பீடிகையோடு திட்டத்துக்கு முழு உடன்பாடு தெரிவிக்கிறார்.

நாட்டில் முதல் செல்வந்தரான அம்பானியின் கடல் போல் விரிந்த மிகப் பெரும் மீடியா நெட்வொர்க் இந்துத்துவா பிரச்சாரத்துக்குத் தயார்!


அம்பானிக்கு பிர்லா சளைத்தவரா?

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியாவின் (HT மீடியா) எக்ஸிகியூடிவ் டைரக்டர் மற்றும் சேர் பர்சன் ஷோபனா பாட்டியா. இவர் 2006 முதல் 2012 வரை காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். தொழிலதிபர் கே.கே.பிர்லாவின் உறவினர்.

இந்தியாவில் டைம்ஸ் குரூப்புக்கு அடுத்தபடியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப்பைவிடப் பெரிய மீடியா சாம்ராஜ்ஜியம் இது.

இது ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஹிந்துஸ்தான் என்ற இந்தி தினசரி, இந்தியில் காதம்பனி மற்றும் நந்தன் போன்ற பத்திரிகைகள் ஆகியவற்றை வெளியிடுவதுடன் ஃபீவர் 104 FM ரேடியோ நெட்ஒர்க்கையும் நடத்துகிறது. அமெரிக்க வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் இணைந்து மின்ட் எனும் பொருளாதாரச் செய்தி இணையதளத்தையும் நடத்துகிறது.

கோப்ராபோஸ்டின் நிருபர் பட்னாவில் இந்துஸ்தான் தினசரியின் மேனேஜர் ஷைலஜா சின்ஹாவைச் சந்தித்து தமது இந்துத்துவப் பிரச்சாரம் பற்றி விளக்குகிறார். ஷைலஜா இந்துஸ்தான் பத்திரிகையால் அதைச் செய்ய முடியும். ஆனால், அதை BP பிராண்டு ப்ரோமோஷன் என்றுதான் நாங்கள் அழைப்போம்; அது பூடகமான விளம்பர யுக்தி என்று விளக்குகிறார். அது விளம்பரமாக இல்லாமல் பத்திரிகையின் உள்ளடக்கமாகவே தென்படும் என்று உறுதியளிக்கிறார்.

கோப்ராபோஸ்ட் நிருபரிடம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா லிமிடெட் துணைத் தலைவர் அவனீஷ் பன்சல் ரகசிய கேமரா முன்பு நடத்திய உரையாடலை ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்பு கண்டோம்.

அடுத்து நிருபரின் ஸ்டிங்கில் HT மீடியா குரூப்பின் பெங்களூரு ஃபீவர் 104 FM ரேடியோ நிலைய இயக்குநர் சௌரப் மிஸ்ரா சிக்கினார். உங்கள் ரேடியோவில் இந்துத்துவப் பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டபோது ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரச்சாரத்தை ஏற்கனவே செய்வதாகவும் அதே அலைவரிசையில் இந்துத்துவா பிரச்சாரமும் செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெயரைக் கெடுக்கப் பணிபுரிவதாகவும் ஒப்புக்கொள்கிறார்.

விலைவாசி உயர்வு, ஊழல்கள், பயங்கரவாதம், ஐடி தொழில் நெருக்கடி, விவசாயிகள் நெருக்கடி ஆகிய பிரச்சினைகளில் காங்கிரஸ் மீது தாக்குதல் தொடுக்கலாம் என அவரே ஆலோசனை வழங்குகிறார்.


டைம்ஸ் குரூப்பின் ரேடியோ மிர்ச்சியும் தயார்

இதற்கிடையே நிருபர் டைம்ஸ் குரூப்பைச் சேர்ந்த ரேடியோ மிர்ச்சி பட்னா நிலையத் தலைமை அதிகாரி பிரபு ஜாவைச் சந்தித்துத் தன் இந்துத்துவப் பிரச்சாரத் திட்டத்தை விளக்குகிறார். நானும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவன்தான் என்று கூறி இத்திட்டத்தை வரவேற்கிறார் ஜா.

இந்துத் தீவிரவாதம் தலைதூக்கும் மங்களூரில் டைம்ஸ் குரூப்பின் ரேடியோ மிர்ச்சி அக்கவுன்ட்ஸ் பிரிவுத் தலைவர் ஆரோன் டி'மெல்லோவும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக வாக்களிக்கிறார்.

ரெட் FM, பீவர் 104 FM ஆகியவற்றை அடுத்து முக்கிய FM நிறுவனமான ரேடியோ மிர்ச்சியும், அதோடு ரேடியோ ஒன் மற்றும் Big FM ஆகியனவும் 2019 தேர்தலுக்காக இந்துத்துவப் பிரச்சாரத்துக்குத் தயாராகின்றன.


நியூ இண்டியன் எக்ஸ்பிரஸுக்கு 7 கோடி, தினமணிக்கு 3 கோடி!

நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தென்மாநிலங்கள் அனைத்திலும் பதிப்புகளைக் கொண்ட பத்திரிகை. இண்டியன் எக்ஸ்பிரஸ் குரூப்பின் அங்கம். தினமணியும் இவர்களது பத்திரிகைதான். கோப்ராபோஸ்டின் நிருபர் மாறுபட்ட அடையாளத்துடன் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் மார்க்கெட்டிங் இலாகாவின் தலைமை மேனேஜர் மகேஷ் பாபுவைச் சந்திக்கிறார்.

ரூ. 10 கோடிக்கு (நியூ இண்டியன் எஸ்பிரஸில் ரூ.7 கோடிக்கும் தினமணியில் ரூ 3 கோடிக்கும்) இந்துத்துவப் பிரச்சாரம் செய்வதற்கும் ராகுல் காந்தி பெயரைக் குறிப்பிடாது பப்பு என்று கேலி செய்து அவரது இமேஜைக் கெடுக்கவும் டீல் முடிவாகிறது.

பணம் என்றால் மீடியாவின் பெருந்தலைகளும் வாய் பிளக்கும் காட்சிகளைக் கோப்ராபோஸ்ட் வீடியோக்களில் காணுங்கள்!



நம் மாநிலத்தில் உள்ள ஆறுகளும் அவற்றை சீரழிக்கும் தொழிற்சாலைகள் பற்றி :



நம் மாநிலத்தில் உள்ள ஆறுகளும் அவற்றை சீரழிக்கும் தொழிற்சாலைகள் பற்றி :

தாமிரபரணி : மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை , சங்கர் சிமெண்ட் , கோலா , ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா , டாக் ஆலை, கன நீர் ஆலை, அனல் மின் நிலையம் ஆகியவற்ற்றுக்கு ஆதாரமாக இருக்கிறது. இதன் கழிவுகள் ஆற்றைச் சீரழிக்கிறது.

நொய்யல் : திருப்பூர் நகரின் சலவை சாயப்பட்டறை முதலாளிகள் ஆலைக் கழிவுகள் முழுவதையும் நொய்யல் ஆற்றில் திறந்து விடுகிறார். கழிவு நீரில் உள்ள சல்ஃபர், சோடியம், காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் தண்ணீர் ஆகியவை காரணமாக விவசாயத்துக்கோ குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் நஞ்சாக்கப்பட்டு விட்டது.

பவானி : சவுத் இண்டியா விஸ்கோஸ் ஆலை ( தற்போது மூடப்பட்டது) 400 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து பயன்படுத்திவிட்டு அதே அளவு நீரை கழிவாக விட்டது. யுனைடட் ப்ளீச்சர்ஸ், டேன் இண்டியா , டி.டி.கே அட்டைத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள் தங்கள் கழிவை கொட்டின.

கொடகனாறு : திண்டுக்கல் ஒட்டியுள்ள இந்த ஆற்றின் படுகையில் 80 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கழிவு நீய்ர் ஆற்றில் விடப்படுகிறது.

பாலாறு : பாலாற்றுப் படுகையில் 100 சிறிய , பெரிய தோல் தொழிறசாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீராகும். அன்றாடம் 450 லட்சத்தில் இருந்து 500 லட்சம் லிட்டர் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன். ஒரு நாளைக்கு 110 லட்சம் கிலோ தோல் பதனிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

- தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா ? புத்தகத்தில்

***********************************************

காவிரி : கெம்ப்ளாஸ்ட் , மேட்டூர் அனல் மின் நிலையம் , ஈரோட்டு சாயக் கழிவு , பெல் , சேஷசாயி பேப்பர் மில் , டி.என்.பி.எல் மற்றும் கரூரில் உள்ள தொழிற்சாலைகள் காவிரி ஆற்று நீரை கெடுத்தவை.