வெள்ளி, 20 ஜூலை, 2018

தலைவர் பிரபாகரன் உலகின் மூத்த குடிகளான தமிழர்களுக்கு காலம் தந்த கொடை...


"தலைவர் பிரபாகரன் உலகின் மூத்த குடிகளான தமிழர்களுக்கு காலம் தந்த கொடை"-

தமிழினத்தின் வரலாற்றுப் பரப்புக்கால எல்லை மிக நீண்டது. அதனைத் தோற்றக்காலம், கழகக் காலம், கழகம் மருவிய காலம், பிற்காலம், தற்காலம் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த வரலாற்றுக் கால எல்லையில் தமிழர்க்கு நேர்ந்திருக்கின்ற நிகழ்வுகள், ஈட்டங்கள் இழப்புக்கள் பற்பல.

தமிழர்களின் தோற்றம் வரலாற்றுக் காலத்திற்கும் முந்தியது என அறிஞர் குறிப்பிடுகின்றனர். சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவேந்தர் குடியின் வரலாறுகள் கழகக் காலத்திற்கு உட்பட்டவையாகவே காட்டப்படுகின்றன. இந்தக் காலத்திலேயே தமிழினத்தின் ஏற்றங்களும் படிப்படியான தாழ்ச்சிகளும் நிகழ்ந்து விட்டன. கி.மு.10 ஆம் நூற்றாண்டு அளவில் ஆரியர் புகவு தமிழினத்தின் சிதைவுகளுக்கு மூலக்காரணியாக அமைந்துள்ளது. கழகக் காலத்திற்குப் பிறகு தமிழர்களின் அரிய கருவூலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. பண்பாட்டுச் சிதைவு, மொழிச் சிதைவு ஏற்படுத்தப்பட்டுத் தனித்தன்மை பொருந்திய இறையாண்மையுந் தமிழரிடமிருந்து பறிபோகியது.

அனைத்தையும் தமிழன் வந்தேறிகளிடத்தும் இனமாறிகளிடத்தும் இழக்கலானான். தமிழ்க்கலை, தமிழிசை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் மருத்துவம், தமிழ்க் கணக்கியல், கட்டடக்கலை, வானியலறிவு, மண்ணியலறிவு, உளவியலறிவு, தற்காப்புக்கலை முதலானவற்றை இவற்றுள் அடக்கலாம். தொடக்கத்தில் இவற்றைக் காத்துவந்த மன்னாதி மன்னரின் கொடிவழியினர் பெண்ணின்ப வேட்கையாலும் தன்னாதிக்க வெறியாலும் இனத்தையும் மொழியையும் மண்ணையும் சீரழிக்க வந்த பகைகளிடத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மண்டியிட்டு அடிமைப்பட்டுப் போயினர்.

தமிழினம் என்ற ஓர் இனம் இருக்கின்றதா என்று கேள்வி கேட்கும் அளவுக்குத் தமிழினம், தமிழினத்திற்குரிய அடையாளங்களோடு வாழாமற் பிற இனப் பண்பாட்டுத் தாக்கத்திற்கு ஆட்பட்டுத் தன்னை முற்றிலுமாக இழந்து கொண்டிருந்த வேளையில்தான் தென்றிசையில் ஒரு விடிவெள்ளி முளைத்தது.
கி.பி 1027 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இராசேந்திரசோழன் பல்லாயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களையும் தென்கிழக்காசிய நாடுகளையும் தன் கையகப்படுத்தியிருந்தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. இருப்பினும் ஒரு பயனும் இல்லாமல் ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமே அது இருக்கின்றது. இன்று தமிழனுக்கு நாடு இல்லை, உலகின் மூத்த இனம், மூத்த மொழிக்குச் சொந்த இனம் நாடிழந்து நாதியற்றுக் கிடக்கின்றது. நாடு வேண்டுமென்று குரல் கொடுத்த அரசியலார் பலரும் பல்வேறு நயப்புக்களாலும் சூழ்ச்சிகளாலும் அரசியல் விரகுகளாலும் கொண்ட கொள்கைகளையெல்லாம் கைநெகிழ்த்து விட்டனர்.

தமிழினத்தை இன்று அழுத்திக்கொண்டிருக்கின்ற ஆதிக்கம் பெரும் பூதம் போன்றது. அதை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமெனில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு தன்னம்பிக்கையும் மனத்துணிவும் தமிழ்த் தலைமுறைக்கு வந்தாகல் வேண்டும்.

‘ பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் என்கிறார் வள்ளுவர். ‘
யானை உருவத்தால் மிகப் பெரியது, கூரிய தந்தங்களை உடையது, ஆனால் புலி தாக்கினால் அது பயந்து ஓடும். எனவே வலிமையான ஒன்றை எதிர்க்க வேண்டுமெனிற் புலியைப் போன்ற துணிச்சல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை’ என்கிறான் பாரதி. அத்தகு துணிச்சல் தமிழனுக்கு வந்தாக வேண்டும். ஆனால் தமிழனின் நிலைமையோ பன்னூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அடிமைப்பட்டு மரபணு அடிப்படையிற் கோழைமைத் தன்மையதாக மாறி இருக்கிறது. அஞ்சி நடுங்குவது, தனக்குள்ளே அடித்துக் கொள்வது, தன் பெருமை போற்றாமல் மாற்றான் பெருமை போற்றுவது இதுதான் தமிழனின் தற்கால நிலைமை.

இவற்றை மாற்றியமைக்க வேண்டுமானால் தமிழனுக்கு மரபணு மாற்றஞ் செய்யப்பெறுதல் வேண்டும். இத்தகு மரபணு மாற்றத்தைத் தமிழீழத் தமிழனுக்குச் செய்தவர் தான் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள். அஞ்சி அஞ்சிச் சாகும் நிலை மாறித் திரும்பி எதிர்க்கும் மன வலிமையையும் வல்லமையையும் தந்த விடுதலைத் தந்தைதான் பிரபாகரன். நான் தலைவர் பிரபாகரனைத் தமிழினத்தின் ஒட்டுமொத்த விடுதலைத் தந்தையாகப் பார்க்கிறேன். இன்று தமிழினத்தை அடிமை கொண்டிருக்கும் வல்லாண்மைகளை எதிர்த்து வெருட்ட வேண்டுமானால்,
1. ஆத வலிமை (ஆத்ம பலம்) பெற்றிருக்க வேண்டும்.

2. நுணுகிய போர்த்திறம் பெற்றிருக்க வேண்டும்.

3. சூழ்ச்சிகளை வெல்லும் நுண்ணறிவு பெற்றிருக்க வேண்டும்.

4. எதிர்ச் சூழல்களுக்குட் சிக்காமல் அவற்றைத் தகர்த்தெறிந்து ஏற்புடைய சூழல்களை உருவாக்க வேண்டும்.

5. நிறைந்த அரசியல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

6. அடிப்படையில் தமிழ்த் தேசிய உணர்வு பெற்றிருக்க வேண்டும்.

7. எந்தப் புகழ், ஆசை வலைக்குள்ளும் சிக்காமல் தன்னிலும் மேலான மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசிக்க வேண்டும்.

8. உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் ஆழ்ந்த தண்ணறிவு (நிதானம்) பெற்றிருக்க வேண்டும்.

9. அறத்தின் பால் நிற்பதோடு, விருப்பு வெறுப்பு அற்றிருக்க வேண்டும்.
10. எந்த வேளையிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.

11. எவரிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவற்றை ஒருங்கே ஒட்டுமொத்தமாகக் கொண்டிருக்கும் தனிப்பெருந் தலைவர்தான் பிரபாகரன். இந்திய உளவுப்படைத் தலைவரிடம் பிரபாகரன் கூறிய கருத்துக்களே இதற்கு ஏற்புடைய சான்றாகும்.
“நீங்கள் பலரையும் வென்றிருக்கலாம், அடிமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் என்னிடம் தான் தோற்கப் போகிறீர்கள். ஏனெனில் நான் உயிரின் மீது ஆசை இல்லாதவன். சொத்துச் சுகங்களின் மீது ஆசை இல்லாதவன். எவனுக்கு உயிரின் மீது ஆசை இருக்கிறதோ சொத்துச் சுகங்களின் மீது ஆசை இருக்கிறதோ அவன் மற்றவர்களுக்கு விலை போவான். மற்றவர்களால் விலைக்கு வாங்கப்படுவான், என்று கூறியதோடல்லாமற் சொல்லியபடியே இந்தியப் படையைப் பின்னங்கால் பிட்டத்தில் இடிபடத் தோற்று ஓடச் செய்தார். இயக்கத்தின் மீதும் தமிழ் மண்ணின் மீதும் தமிழீழ மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.
தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுத்துத் தமிழீழ மண்ணை விடுதலை பெற்ற மண்ணாக விடுவிப்பதே அவரின் உயிர்க்கொள்கை. இந்தக் கொள்கைக்கு முரணான எந்தச் சூழலையும் அவர் ஏற்றதில்லை.

இந்தியப்படை தமிழீழ மண்ணை வலிந்து பிடித்து இறுகல் நிலையை ஏற்படுத்திய காலத்தில் இச்சூழலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகக் கருவிகளை ஒப்படைத்து விடலாம் என்று பொறுப்பாளர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார். ‘போராட்டத்தை நிறுத்திக் கருவிகளை ஒப்படைத்து விட்டால் தமிழ் மக்களின் உரிமைகள் என்னாவது’ என்று தலைவர் கேட்க, ‘அதனை இந்தியா பார்த்துக் கொள்ளுமாம்’ என்று பொறுப்பாளர் விடையிறுத்திருக்கிறார். இதனைக் கேட்ட தலைவர் ‘நான் இறந்த பின் இந்த இயக்கத்தைச் சில்லறையாகவோ ஒட்டுமொத்தமாகவோ விலைபேசி விற்றுவிடுங்கள்’ என்று கடிந்து இம்மியளவுகூடக் கொள்கை பிறழா மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சூரியக்கதிர் நடவடிக்கையின் போது தலைவர் எடுத்த முடிவு மிகச் சிறப்புக்குரியது. காலத்தை எண்ணிப் பார்த்ததும் எதிரிகளின் முகத்திற் கரியைப் பூசியதும் உலகத்தையே வியக்க வைத்தன. எதிரி எதிர்பார்க்காத தாக்குதலை எதிர்பாராத நேரத்திற் தந்துவிடு என்பது பிரபாகரனால் வழங்கப்பட்ட போர் உத்தி. அன்று புலிகளை இழிவுபடுத்திப் பேசிய மேதாவிகளெல்லாம் இன்று மூச்சுப் பேச்சில்லாமல் இருக்கின்றனர். தொடர்ந்தாற் போல, ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2, ஓயாத அலைகள்-3 தலைவர் பிரபாகரனின் மிக நுட்பமான போர்த்திறத்தை உலகுக்கு வெளிக்காட்டி உலகத் தமிழரின் தலைகளை நிமிர்த்தியவை.

கருவி ஏந்திய போரில் மட்டுமன்றி அறிவாண்மையைப் பயன்படுத்தும் அரசியற் போரிலும் தலைவர் மன்னாதி மன்னரையெல்லாம் நிலைகுலையச் செய்து வருகின்றார்.

2003 ஆம் ஆண்டு அவரைப் பார்த்து உரையாடும் வாய்ப்பு மலேசிய ஊடகவியலாளர் ஒருவருக்கு கிட்டியது. அதன்போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்  கூறிய பதில்கள்.
"நான் ஏன் இந்தப் படையுடையை உடுத்திக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன் தெரியுமா? உலகத்தில் எல்லாத் தமிழரும் எல்லா உடைகளையும் அணிந்திருக்கின்றனர். அவர்கள் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால் தான் நான் அணிந்திருக்கிறேன். தமிழர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க வேண்டும். சிறுசிறு பொருளியற் கூட்டுறவுத் திட்டங்களின் வழி தங்கள் பொருளியல் வலுவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய உணர்வோடு வாழ வேண்டும். ஆரியர்கள் தமிழர்களை அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் பழித்து எழுதியிருக்கின்றனர். புராணத்தில் அசுரர்களைக் கருப்பர்களாகவும் தடித்த மீசை உடையவர்களாகவும் காட்டியுள்ளனர். யார் அப்படி இருக்கிறார்கள். நாம் தானே. தமிழர் கொண்டாட வேண்டிய விழா பொங்கலே. இவ்வாறு பல அரிய தகவல்களை அந்த ஊடகவியலாளருக்கு கூறியிருந்தார்.

அவருடைய பேச்சும் குரலும் மென்மையானவையாகவும் அன்புமயப்பட்டவையாகவும் இருந்தன.
கைகள் மென்மையாகப் பூப்போன்றிருந்தன. ஆனால் அவருடைய உள்ளமும் உணர்வும் அசைக்க முடியாத உறுதி வாய்ந்திருந்தன. அவரின் விழிகள் ஒளியுமிழ்கின்றனவாகவும் கூரியனவாகவும் இருந்தன. தமிழனுக்குக் கிடைத்த அத்தவமகனைச் சந்தித்து உரையாடியது கழிபேருவகையையும் பெருமையினையும்  அளித்ததாக அந்த ஊடகவியலாளர் நினைவு கூறியிருந்தார்.

ஆம் அவர் காலத்தால் தமிழருக்கு அளிக்கப்பட்ட தனிப்பெருங்கொடை. அப்பெருங் கொடையை உலகத் தமிழினம் கண்ணேபோற் பொன்னேபோற் போற்றிப் பாதுகாக்கவேண்டும். புலிகளின் வேட்கையினை வெற்றி பெறச்செய்ய அனைத்தாலும் உதவவேண்டும்.
தமிழர்  அடையாளம்

அச்சத்தை உடைத்த சிறுத்தைகள்..




அச்சத்தை உடைத்த சிறுத்தைகள்..
...........................
நேற்று இரவு 11மணிக்கு மேல் இருக்கும்.ஊடகவியலாளர் நண்பர் ஒருவர் என்னோடு தொலைபேசி ஊடாக பேசினார்.
“ அண்ணே திருவண்ணாமலையில்
இந்த 8 வழிச்சாலைக்கு எதிரான சிறுத்தைகளின் போராட்டம் பெரிய வெற்றி.
கூட்டம் மிக பிரமாண்டமாக இருக்குதுண்ணே.
எடப்பாடிய மிரட்டிடீங்க.
நல்ல மக்கள் கூட்டம்.
பாமக கருத்து கேட்க போறேன்னு ஏமாத்துறாங்க.
திமுக 8 வழிச்சாலையை
எதிர்க்கவில்லைன்னு சொல்லிட்டாங்க.
தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் இவ்வளவு துணிச்சலா மக்களை திரட்டி போராடுனது இல்ல.
இந்த கூட்டத்த பார்த்தாவது எடப்பாடி,” மக்களே நிலங்கள தாமாக முன்வந்து தாராங்கன்னு”
பொய் சொல்றத நிறுத்தனும்.
இதுல எனக்கு வருத்தம் இவ்வளவு பெருங்ககூட்டத்த மீடியாக்கள் சரியா லைவ்வோ, செய்தியோ பண்ணல. வெட்கமா இருக்குண்ணே”
என்றார்.

அந்த நண்பர் தலைவரின் தனிப்பேட்டி வேறு கேட்டார்.

இது தான் இன்றைய தமிழக அரசியலின் கள நடைமுறை.
8 வழிச்சாலை கூடாது என்பது மக்கள் கருத்து.
ஏனென்னறால், திருவண்ணாமலையில் கூடிய கூட்டம் வெறும் சிறுத்தைகள் மட்டுமல்ல.
வெகு மக்களும் கூடிய கூட்டம்.
துண்டறிக்கை கொடுத்தாலே கைது என்கிற அச்சத்தை சிறுத்தைகளின் இந்த போராட்டம் உடைத்திருக்கிறது.
போராட்டம் என்றாலே கைது என்கிற பேரச்சத்தை எழுச்சித்தமிழரின் நெருப்பு உரைவீச்சு தீக்கிரையாக்கியிருக்கிறது.

தமிழகத்தில்
 நிலவி வந்த
‘அச்ச அமைதியை’ஒவ்வொரு முறையும் சிறுத்தைகளே உடைத்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு, 
ஜெயலலிதா ஆட்சியின் போது
புலிகளை ஆதரித்து பேசியதற்காக,
‘தடா’’பொடா’என்று தலைவர்கள் வைகோ, நெடுமாறன், சுபவீ என்று கைது செய்யப்பட்ட சூழலில் அடுத்த கைது திருமாவளவன் தான் என்று ஊடகங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த சூழலில்,
புலியின் குகையான கிளிநொச்சிக்கே போய்,
புலித்தலைவனையும் சந்தித்து
தாயகம் திரும்பியவர் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே.
அப்போது ஜெயலலிதா,
விமான நிலையத்திலேயே எழுச்சித்தமிழரை கைது செய்யப்போகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெறியிட்டன.
அத்தனை அச்சத்தையும் தவிடு பொடியாக்கினார் எழுச்சித்தமிழர்.
“விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன்.முடிந்தால் கைது செய்து பார்” என்று முழங்கினார்.
அதே போல, கலைஞரின் ஆட்சியின் போது,விடுதலைப்புலிகள் படமோ, மேதகு பிரபாகரன் அவர்களது படம் போட்ட பேனர் சுவரொட்டிகள் போட்டால் போலீசார் அந்த சுவரொட்டிகளை கிழித்து வழக்கு போட ஆரம்பித்தார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக என்( வன்னி அரசு)
மீது கூட பொய் வழக்கு போட்டார்கள்.
இந்த சூழலில் தான், சென்னையில்
கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தி அப்போது நிலவி வந்த பெரும் அச்சத்தை உடைத்தெரிந்தார்.
“யார் அமைதி காத்தாலும் சிறுத்தைகள் அமைதி காக்க மாட்டோம்” என்று அரசுகளுக்கு எச்சரித்தார் எழுச்சித்தமிழர்.

அதே எச்சரிக்கையை தான்
 இன்று எடப்பாடி அரசுக்கு
சிறுத்தைகள் விடுக்கிறோம்.
அதே அச்சத்தைத்தான்
சிறுத்தைகள் உடைக்கிறோம்.

அது அரளிக்காய் தான்
அது நஞ்சுக்காய் தான்
என்று தெரிந்த பிறகும்
நஞ்சா இல்லையான்னு
மக்களிடம் கருத்து கேட்கிற
‘ஏமாற்றுதாஸ்’களுக்கு மத்தியில்
களத்தில் நிற்கும் போராளியாய்
எழுச்சித்தமிழர்
தமிழக மக்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்.

சேலத்தில் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை
இந்த 8 வழிச்சாலைக்கு
எதிராக கூடி
அச்சத்தை
இன்னும் உடைப்போம்....
                       - வன்னி அரசு

மோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..!


மோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..!

பிரதமர் நநேரந்திர மோடியின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் 42 முறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் 84 நாடுகளை சுற்றியிருக்கிறார். இதன் பயணச்செலவு மட்டும் ரூ 1 484 கோடி என நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரையிலான காலத்தில், பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேகாலக்கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2016-17ஆம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18ஆம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17ஆம்  ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.  மோடி பிரதமராக  கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 42 முறை மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். கடந்த 2015-16ஆம் ஆண்டில் அதிகப்பட்சமாக 24 நாடுகளை மோடி சுற்றியிருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயணத்தின் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் நேரடி ஹாட்லைன் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்…!


மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்…!

புதுதில்லி;
மோடி அரசு வந்தபிறகு அம்பானி சகோதரர்களுக்கு தாராளமாக வழங்கிய வெகுமதி
களின் பட்டியலில் கடைசியாக வந்திருப்பது ஜியோ இன்ஸ்டிட் யூட் துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டுள்ள சிறப்புத்தகுதி. அடிப்படை விதிகளை மீறி வங்கி கடன்களை திருப்பி செலு
த்துவதில் சலுகை, ரபேல் விமான ஒப்பந்தத்தில் பங்குதாரர், ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு வழங்கிய ஒத்துழைப்பு போன்ற வை ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு பாஜக அரசிடமிருந்து கிடைத்த சலுகைகளில் சில. பண மதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக நடந்த இலவச ஜியோ சிம் வினியோகத் திட்டத்தின் மூலம் ஆதாயமடைந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயுடன் இணைந்து ஜியோ பேமென்ட்ஸ் வங்கி நடைமுறைக்கு வந்தது நவம்பர் 10ஆம் தேதி. இதற்கு மூன்று நாட்கள் முன்னதாகத் தான் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ரிலையன்ஸ் ஜியோவின் பிரீபெய்டு வாலட் அமைப்பான ஜியோ மணியும் இதே காலத்தில் வெளிவந்தது. ஜியோ வாடிக்
கையாளர்களுக்கு எஸ்பிஐயின் நவீன வடிவிலான பணபரிமாற்றத்துக்கு உதவும் ஏற்பாடே ஜியோ மேமென்ட் வங்கி. சிறிது காலமாக திரைமறைவில் நடந்த வற்றின் பலனாக ரிலையன்ஸ் பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்ள பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தியாவும் பிரான்சும் செய்துகொண்ட ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் பகுதியாக ரிலையன்ஸுக்கு கிடைத்தது 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம். மொத்தம் 36 போர் விமானங்கள் வாங்க 60ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா செலவு செய்ய உள்ளது. அதில் பாதி தொகையை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்பு வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ள தனி
யார் நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது.

மூடப்படும் நிலையில் உள்ள பிரான்சின் தாசூத் நிறுவனத்துடன் இந்தியா இந்த ஒப்பந்
தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 10 நாட்க
ளில் தாசூத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் இணைந்து தாசூத் -ரிலையன்ஸ் ஏரோஸ்
பேஸ் என்கிற கூட்டு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தன.ஒப்பந்தத்தின் பாதி தொகைக்கு
ரிய கட்டுமானங்கள் தாசூத்தின் இந்தியப் பங்காளி என்கிற முறையில் ரிலையன்ஸ் விட்டுக்கொடுக்கும். நாக்பூரில் ரிலையன்ஸுக்கு சொந்தமான இடத்தில் இந்த கட்டுமானப்பணி
கள் துவங்கி உள்ளன. ரபேல் ஒப்பந்தத்தின் துவக்கத்தில் பொதுத்துறை நிறுவனமான
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குதாரராக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த நிறு
வனத்தை கைகழுவிவிட்டு ரிலையன்ஸை பங்காளியாக்கி உள்ளது மோடி அரசு.

முகேஷ் அம்பானியின் நிறுவனம் 16 ஆயிரத்து 10 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்து
வதற்கு 2015இல் பொதுத்துறை வங்கிகள் 16 வருட கால அவகாசம் வழங்கியுள்ளன. கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்த தால் பொதுத்துறை வங்கிகள் திணறி வருவதாக கூறி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆந்திர கடற்கரையை
யும் குஜராத்தையும் இணைக்கும் 1386 கிலேமீட்டர் எரிவாயு குழாய் பதிக்கும் ரிலையன்ஸ் கேஸ் இன் பிராஸ்ட்ரக்சர் (ஆர்ஜிடிஐஎன்) நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் இந்த சலுகையை வழங்கியுள்ளன.

மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்...!

சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்


சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்...

சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்
இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான்
சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5
லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம்
கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன
அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில்
வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60
லட்சம் தேவைப்படும். தினம் தினம்
விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால்
நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க
வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க
ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம்
கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில்
ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய
கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன் ”5
லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க,
மகன்,

அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்
கடனை மாதத் தவனை முறையில் 20
வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.
வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300
வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல
வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்
அவன். அவர் முகம் மாறியது.

ஆனால் மகன்
ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று,
வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய
பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள்
என்றான்.

அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேந்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல
இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர்,
இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.

உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்
பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட
நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்

”இது எல்லாம்
உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான்.
என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம்
வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில்
பணம் வேண்டும். பேசாம தூங்குங்க!
வந்தது அசதியா இருக்கும்” என்றான்.

மனம்
கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும்
அன்று உறங்கிவிட்டார்.

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார்.
மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.

கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட
வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்
பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.

பக்கத்தில்
வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா?” என்றான்.

ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார்
டி சாப்பிடலாம்” என்றான்.

சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும்
ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின்
கதவு அடைத்திருக்கு?”
அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும்
நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட்
வரைக்கும். பல வீட்ல கணவன்
மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க.
அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க
ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல
வராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த
புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்
போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க
வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா?
அதனால ஒன்னு அவங்க சொந்த
ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க
அவங்களை முதியோர் இல்லத்தில
சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர்
நின்று கொண்டு இருக்க அவன்
தொடர்ந்து சொன்னான், “

இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர்
தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான்
கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார்
பெரியவர்.
தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம்
பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள்
மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.

”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”
”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12
மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப்
பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான்
வேலைக்கு போயிருவேன். அவ
வீட்டு வேலையையெல்லாம்
முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல
விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும்
பேசிக்கவே மாட்டிங்களா?”

”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம்
அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10
மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா.
அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம்
எதாவது ஹோட்டலுக்குப் போய்
சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”
அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு.
இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும்
அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில்
அறைந்தது போல இருந்தது.

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.

”என்ன
அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:

”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம்
என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும்
சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.
கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன்
காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால்
உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன்.
விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன்
படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன்
வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில்
நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன்
கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப்
புறப்பட்டுச் சென்றார்
அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.

எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!

(குறிப்பு; இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும் பொருந்ததும்.