சனி, 28 மார்ச், 2020

பதட்டம் வேண்டாம்

பதட்டம் வேண்டாம்!
*————————-*

*கொரோனாவினால் தினசரி புதிய நோயாளிகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. சமூக தனிமைப்படுத்தல் மூலம் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர்.*

*ஒரு சாமானியனின் சந்தேகம். நாம்தான் ஒருநாள் சுய ஊரடங்கு கடைப்பிடித்தோமே, நேற்றிலிருந்து 144 தடை உள்ளதே. பின்பு ஏன்  ஒருநாளில் இவ்வளவு புதிய கேஸ்கள்? 144 எல்லாம் வேஸ்ட்டா?*

*இல்லை.*

*கொரோனா வைரஸ் ஒருவர் உடம்பில் நுழைந்த உடனேயே வியாதி தோன்றுவதில்லை. சுமார் 4 முதல் 14 நாள்கள் (அதிகபட்சம் 21 நாள்கள்) வரை எந்த அறிகுறியும் இல்லாமல் உடலில் பெருகிக் கொண்டிருக்கும் ( incubation period). ஆனாலும் இந்த சமயத்தில் அவர் மற்றவருக்கு கிருமிகளை பரப்புவார். பலருக்கு வியாதி அறிகுறிகள் இல்லாமலேயே கடந்து போகவும் வாய்ப்புள்ளது. வியாதி தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் கிருமித் தொற்று உள்ள அனைவருமே கிருமியை மற்றவர்க்குப் பரப்ப முடியும்.*

*நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் புதிய நோயாளிகள் சுமார் 4-14 நாள்கள் முன்பாகவே தம் உடலுக்குள் கிருமியைப் பெற்றவர்கள். 144 தடை ஆரம்பிக்கும் நாள் வரையில் கிருமிகளைப் பெற்றவர்கள் இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் வரை வியாதி அறிகுறிகளைப் பெறுவார்கள். எனவே வரும் நாள்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். அதுவும் 144 தடை அமலாக்கத்திற்கு முதல் நாள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ஆயிரம் பேர் சிக்கியதால் இன்னும் இரு வாரங்கள் வரை புதிய நோயாளிகள் எண்ணிக்கை நம் அமைச்சர் அவர்கள் சொன்னது போல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கலாம்*.

*தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று எப்போது கூற முடியும்?*
*ஒரு உச்சத்துக்குப் பின் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை எப்போது முந்தைய நாள்களைவிட படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று கூற முடியும். 144 ஊரடங்கை நாம் முழுமையாகக் கடைப்பிடித்தால் மூன்று வாரங்களுக்குள் அந்நிலையை எட்டிவிட முடியும்.*

*எனவே இன்றைய நாளைய நம்பர்களைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாமல் முழுமையான சமூக விலகல் மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்*. *இது மூன்று வாரங்களில் முடிகின்ற பிரச்சனை அல்ல. தொடர்ச்சியான சுகாதார கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் மாதக்கணக்கில் ஏன் வருடக் கணக்கில் தேவை. இழப்புகள் மிக அதிகம் என்றாலும் இதனை ஒரு சுயபரிசோதனைக் காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.*_

*_இத்தாலி, ஸ்பெயினின் கசப்பான பாடங்களை நினைவில் கொள்வோம்._* *வெல்வோம்.* *நம்பிக்கையுடன் இருப்போம்*.

எங்கு தோன்றி எப்படி பரவியது கொரோனா தொற்று? மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

எங்கு தோன்றி எப்படி பரவியது கொரோனா தொற்று? மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட சீனாவின்  வூஹான் நகரின் மீன் உணவு சந்தையில் 2019 டிசம்பர் மாத துவக்கத்தில் நான்கு நபர்களிடம் நுரையீரல் அழற்சி (நிமோனியா) தென்பட்டது. இதற்கான அறிகுறிகள், இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும்.

டிசம்பர் மாத துவக்கத்தில் இறுதியில்  பேருக்கு இருந்த இந்த தொற்று பல மடங்கு பெருகியது. ஆனால், உண்மையில் பல ஆயிரம் பேருக்கு அது அந்த சமயத்திலேயே தொற்றியிருக்கும். மருத்துவர்களுக்கு இது மிக பெரிய சவாலாக இருந்திருக்கும்.

அந்த பல்லாயிரக்கணக்கானவர்களிடமிருந்தும்  குறைந்தது நான்கு அல்லது ஐந்து பேருக்கு 31 டிசம்பர் 2019க்குள் தொற்றியிருக்க கூடும். அப்போது தான் சீன அரசு உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த தொற்றின் தீவிரம் குறித்து கூறியது. ஆனால், இந்த தொற்றை சரி செய்ய முடியும், கட்டுப்படுத்த முடியும் என்றே கூறியுள்ளது.

அந்த நேரம் புத்தாண்டு நேரமாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது. புத்தாண்டையொட்டி பல லட்சக்கணக்கானோர் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், சீனாவிற்குள்ளே பல மாகாணங்களுக்கும் பயணம் செய்தது தவிர்க்க முடியாததாகி விட்டது. பல ஆதாரபூர்வமான தரவுகளின் அடிப்படையிலும், அலைபேசி தடங்கானல்களின் உதவியோடும் வூஹான் நகரத்தை விட்டு ஜனவரி 2020 அன்று மட்டும் 1,75,000 பேர் வெளியேறியுள்ளார்கள். மூன்று வாரங்களில் (ஜனவரி 21) வூஹான் நகரத்திலிருந்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம். சீன அரசு தாமதமாக, அந்த நேரத்தில் தான்  பயண தடையை  விதித்தது.

இரண்டு வாரங்களில் (பிப்ரவரி 4) சீனாவின் பல பகுதிகளில் உள்ள  பல லட்சக்கணக்கானோருக்கு இந்த தொற்று பரவிவிட்டது. சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பலர் பயணமாயினர். அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 900 பேர் அமெரிக்காவின்  நியூயார்க் நகருக்கும், 2200 பேர் ஆஸ்திரேலியாவின்  சிட்னிக்கும், 15,0000 திற்கும் மேலானோர் பாங்காக் நகருக்கும்  பயணமானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 23 : முதன் முதலில், சீனாவை தவிர்த்து வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது 61 வயதான தாய்லாந்தை  சேர்ந்த பெண்மணியிடம் தான். ஜப்பானின் டோக்கியோ, சிங்கப்பூர், கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் சிலரும், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஒருவரும்  இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. பயணம் செய்தவர்களில் 85 விழுக்காடு சோதனை செய்யப்படாதவர்கள். அவர்கள் மூலம் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஜனவரி இறுதி : வூஹான் நகரத்தில் ஊரடங்கு அப்போது தான் அமல்படுத்தப்பட்டது. ஜனவரி 31 அன்று அமெரிக்கர்கள் அல்லாத மற்ற நாட்டவர்களுக்கு சீனாவிலிருந்து வர அனுமதியில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால், அதற்குள்ளாகவே 26 நாடுகளில் 30 நகரங்களில் வூஹானிலிருந்து சென்றவர்களால் இந்த தொற்று பரவிவிட்டது. சீனாவுக்கு செல்லாதவர்களாக இருந்தாலும் தொற்று பரவி, சர்ச்சுகள் மற்றும் உணவு விடுதிகள் போன்ற பொது இடங்களுக்கு சென்றவர்களால் அதிகளவு பரவிவிட்டது.

மார்ச் 1 : ஈரான், இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தொற்று உள்ளதாக அறியப்பட்டது. இதனிடையே சீனா பல லட்சக்கணக்கானோருக்கு பரவியிருந்த தொற்றை  பரிசோதித்து, தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியது.

மார்ச் 11 : அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் "இந்த தொற்றை   அண்ட விடமாட்டோம்" என்று கூறினார். இந்த அதீத நம்பிக்கையின் காரணமாக சோதனை செய்யும் முயற்சி தாமதமானது. மார்ச் 20க்குள்  சியாட்டில் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இந்த தொற்று தீயாக பரவியது. இந்த பதிவை நான் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்று உள்ள 54,968 பேரில் 15000 பேர் நியூயார்க் பெரு நகரத்தை சார்ந்தவர்கள். அமெரிக்காவின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 56 விழுக்காடு நபர்கள் நியூயார்க் நகரத்தை சார்ந்தவர்கள்.

பாகிஸ்தானில் இது  வரை 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 7 பேர் பலியாகியுள்ளனர். இன்று பகல்  நிலவரப்படி உலகில் இது வரை  4,35,374 பேருக்கு தொற்று உள்ளது. 19,618 பேர் இறந்துள்ளனர். இந்த பேராபத்தின்  பிடியில் இருந்து நாம் மீள முடியுமா? அதற்கான நடவடிக்கைகள் என்ன?

சீனாவில் தோன்றினாலும் இத்தாலியில் தான் இது வரை அதிகளவு உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் 6820, சீனாவில் 3281, ஸ்பெயினில் 3434, ஈரானில் 2077, ஃ பிரான்சில் 1100, அமெரிக்காவில் 784, இங்கிலாந்து உட்பட்ட பிரிட்டனில் 422, நெதெர்லான்ட்ஸில் 213, ஜெர்மனியில் 172, ஸ்விட்ஸர்லாந்தில் 145, தென் கொரியாவில் 126, பெல்ஜியத்தில் 178 பேர் என்று உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. உலகின் 195 நாடுகளில் கோரோனா வின் தாக்குதல் உள்ளது.

இந்தியாவில் நிலை என்ன?

இன்று (25/12/2020) பகல் நிலவரப்படி 22038 பேரின் 22,928 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 639 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் மீண்டுள்ளனர்.

இந்திய அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதா?

ஆம். உறுதியாக மேற்கொண்டது.இந்திய அரசு ஜனவரி மாதம் முதற்கொண்டே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்தது.

17/01/2020/21/01/2020 - சீனாவிலிருந்து வரும் பயணிகளிடம்  வெப்ப ஊடுகதிர் சோதனை துவங்கியது.

 28/01/2020 : "பிரதமர், கொரோனா தொற்று குறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இது குறித்து உங்கள் மாநிலங்களில் அறிகுறியிருந்தால்  உடன் தெரிவிக்கவும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தெரிவித்துள்ளேன்" : ஹர்ஷ்வர்தன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

ஜனவரி மாதம் 30ம் தேதி கேரளாவில் தான் முதல் கொரோனா தொற்று நோயாளி கண்டறியப்பட்டார். சீனாவின் வூஹானிலிருந்து வந்த மூன்று மாணவர்களிடம் கண்டறியப்பட்டது. இதன் பிறகு, சீனாவிலிருக்கும் தொற்றில்லாத இந்தியர்களை அனுப்புமாறும் மீட்பதற்கு அனுமதி தருமாறும் சீனாவிடம் கேட்டது மத்திய அரசு. .

 பிப்ரவரி  1 : சீனாவிலிருந்து 324 இந்தியர்களை விமானத்தில் மீட்டு கொண்டு வந்தது மத்திய அரசு.

 பிப்ரவரி 2 : மீண்டும் சீனாவிலிருந்து 323 இந்தியர்களை விமானத்தில் மீட்டு கொண்டு வந்தது மத்திய அரசு.

 பிப்ரவரி 2 - மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 பிப்ரவரி 3 - மத்திய அமைச்சர்களின் ஏழு பேர் அடங்கிய  உயர்நிலை குழு வடிவமைக்கப்பட்டது. 593 விமானங்களில் வந்திறங்கிய 72,553 பயணிகள் சோதிக்கப்பட்டனர்.

 பிப்ரவரி 5 : சீனாவுக்கு பயணம் செய்த இந்தியர்  அல்லாத அந்நியர்கள் அனைவரின் விசாக்களும் ரத்து என்று முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி 27 : 76 இந்தியர்கள் உட்பட 112 பேர் சீனாவிலிருந்து மீட்டு வரப்பட்டனர். மேலும் 15 டன்கள் எடையுள்ள முகமூடிகள், கையுறைகள், மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களை சீனாவுக்கு  அளித்தது இந்தியா.

அதே நாளன்று, 119 இந்தியர்கள் உட்பட 124 பேரை ஜப்பானிலிருந்து மீட்டது மத்திய அரசு.

மார்ச் 10 : ஈரானில் தவித்து கொண்டிருந்த 58 இந்திய யாத்ரீகர்களை மீட்டு கொண்டு வந்தது மத்திய  அரசு.

மார்ச் 11 :  ஈரானில் தவித்து கொண்டிருந்த 44 இந்திய யாத்ரீகர்களை மீட்டு கொண்டு வந்தது மத்திய  அரசு.

மார்ச் 11 : இத்தாலியில் பரிதவித்து கொண்டிருந்த 74 இந்தியர்கள் உட்பட 83 பேரை மீட்டு வந்து தனிமையில் இருக்க வைத்தது அரசு.

மார்ச் 15 : இத்தாலியிலிருந்து 218 இந்தியர்கள் மீட்டு வரப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர்.

மார்ச் 15 : ஈரானிலிருந்து மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அடங்கிய 234 இந்தியர்களை மீட்டு வந்து தனிமைபடுத்தி சோதனை செய்தது மத்திய அரசு.

மார்ச் 16 : ஈரானிலிருந்து 52 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை மீட்டு வந்தது மத்திய அரசு.

மார்ச் 22 : இத்தாலியிலிருந்து 263 இந்திய குடிமக்களை மீட்டு வந்தது மத்திய அரசு.

இதன் பின் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கை செய்யப்பட்டன.மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை குறைக்க நடவடிக்கை எடுத்தன. மத்திய அரசின் ஆலோசனைக்கேற்ப பல்வேறு சோதனை கூடங்களை ஏற்படுத்தி வந்தது மாநில அரசுகள்.

13 மார்ச் : பிரதமர் சார்க் நாடுகளிடம் உரையாடி 'ஒருங்கிணைந்த போராட்டத்தை கொரோனா விற்கு எதிராக செய்வோம்' என்று கூறியதை வரவேற்றது சார்க் நாடுகள். மார்ச் 15 அன்று சார்க் நாடுகளுக்காக 73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

19 மார்ச் : 22 மார்ச் அன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர்.

22 மார்ச் :" கொரோனாவுக்கு எதிரான மிக நீண்ட நெடிய போராட்டத்தின் துவக்கமே இந்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கு" என்றார் பிரதமர்.

24 மார்ச் : இன்றிலிருந்து துவங்கி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர்.

இப்படி பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. கொரோனாவை  பேரிடராக அறிவித்துள்ள நிலையில், கூடுதல் சோதனை நிலையங்கள், வெப்ப ஊடுகதிர் சோதனை இயந்திரங்கள், செயற்கை சுவாச இயந்திரங்கள், மற்ற மருத்துவ உபகரணங்கள், ஆகியவற்றை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (இந்த நிதியில் 75 % மத்திய அரசுடைய பங்கு) எடுத்து கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் மருத்துவ செலவுகள், தேசிய சுகாதார இயக்கத்தின் நிதியிலிருந்து ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான மற்றும்  கட்டிட தொழிலாளர்களுக்கான உபரி வரியின் மூலம் வசூலிக்கப்பட்ட நிதியிலிருந்து அந்த தொழிலாளர்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே போல் நேற்று பிரதமர் அவர்கள் நாட்டு மக்களிடையே பேசும்போது கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்படும் மருத்துவ கட்டமைப்புகளுக்கு ரூபாய்.15,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

'சமூக விலகல்' ஒன்று மட்டுமே கொரோனா என்ற தீய சக்தியிடமிருந்து  மக்களை பாதுகாக்கும் என்பதை நன்கு அறிந்தே, பிரதமர் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடையே இது விரைவில் தொற்றும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். குறித்த நேரத்தில் நாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முடிகிறது. இதில் அனைத்து அரசியல் கட்சியினரும் (ஒரு சிலரை தவிர) முழு ஒத்துழைப்பை அளித்து வருவது சிறப்பு. காவல் துறையினர், மருத்துவ துறையினர், அரசு அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மற்றும் எண்ணற்ற கணக்கானோர் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தேவையற்ற பல்வேறு விமர்சனங்களை, கேள்விகளை, கேலிகளை முன் வைக்கும் நிலையிலும், அவர்களும் நம் குடும்பத்தில் ஒருவர் என்றெண்ணி   பிரார்த்தனை செய்து அரசோடு ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை.10 லிருந்து 25 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நம்பிக்கையையும் ஊட்ட வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

வரும்முன் காப்போம். உலகிற்கு இந்தியா ஒருங்கிணைந்த அபார சக்தி என்பதை நிரூபிப்போம். வாருங்கள். போரை வெல்வோம்.