ஞாயிறு, 27 மே, 2018

மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை!


#ஜூனியர்விகடன்

#மிஸ்டர்கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை!

கழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.

‘‘அவை என்ன?”

‘‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்தேன். தூத்துக்குடியில் துப்பாக்கிகளைக் கையாண்டவர்களுக்கு ‘ஆபரேஷன் Center Mass’ தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

‘‘அது என்ன Center Mass?’’

‘‘துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கும்போது துப்பாக்கியின் வகைகள், ரேஞ்ச், தோட்டாக்கள் பற்றியெல்லாம் பாடங்கள் நடத்தப்படும். அதில், Center Mass பற்றியும் விளக்குவார்கள். கலவரத்தை அடக்குவதற்காகச் சுட வேண்டுமென்றால், காலில்தான் சுடுவார்கள். ஆனால், Center Mass என்பது வேறுவகைத் தாக்குதல். அதாவது, தோட்டாக்களுக்குச் சேதாரம் இல்லாமல் உயிரை எடுக்கும் தாக்குதல் இது. எங்கு சுட்டால் இலக்கு தவறாதோ, உயிர் உடனே போகுமோ, அங்கே சுடுவது. வயிற்றுக்கு மேலே இருக்கும் உடல்பகுதிதான் அகலமானது. உயிர் காக்கும் உறுப்புகள் இங்கேதான் உள்ளன. இந்த இடங்களைக் குறிவைத்துச் சுடுவதைத்தான், Center Mass எனப் பயிற்சியில் குறிப்பிடுவார்கள். அதாவது, உடலின் மத்தியில் அகன்று இருக்கும் பகுதியில் சுடுவது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இதற்காக வைக்கப்படும் மனித உருவங்களில், தலையிலும் மார்பிலும் சுட வைப்பார்கள். தூத்துக்குடியில் பலரும் இந்த இடங்களில் குண்டு பாய்ந்தே இறந்துள்ளனர். ‘இப்படித்தான் சுட வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு போயுள்ளது’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.’’

‘‘இப்போதுகூடத் துப்பாக்கிச்சூடு பற்றித் தனக்குத் தெரியாது என்ற தொனியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரே?”

‘‘எடப்பாடி சொல்வதில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. 100 நாள்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தபோது, ஒவ்வொரு நாளும் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் முதல்வரைச் சந்தித்து, ‘தூத்துக்குடியில் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. விரைந்து முடிவெடுங்கள்’ என்றனர். அவரோ, ‘இதில் நான் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. தலைமைச் செயலாளரிடம் பேசி, நீங்களே முடிவெடுங்கள்’ என்று சொல்லிவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் பல விஷயங்களை நேரடியாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைத் தொடர்புகொண்டுதான் தெரிவிக்கிறது. அவர், அந்தத் தகவலை முதல்வரிடம் சம்பிரதாயத்துக்குத் தெரிவித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறார். இதனால்தான், முதல்வர் இதிலிருந்து கழன்றுகொண்டார். அந்த அடிப்படையில்தான் முதல்வர், ‘எனக்குத் துப்பாக்கிச்சூடு பற்றி எதுவும் தெரியாது’ என்று குறிப்பிட்டார்.’’

‘‘போலீஸ் தரப்பில் எங்கு ஓட்டை விழுந்தது?”

‘‘அண்மையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதுமிருந்து ஊழியர்களை ரகசியமாகத் திரட்டினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்தார், தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கவனிக்கும் உளவுப்பிரிவு ஐ.ஜி-யான ஈஸ்வரமூர்த்தி. அவரே உட்கார்ந்து ஸ்கெட்ச் போட்டு, போராட்டக்காரர்கள் கிளம்பும் இடத்திலேயே அவர்களுக்கு ‘செக்’ வைத்து வரவிடாமல் தடுத்தார். கடைசியில் சில ஆயிரம் பேர்தான் சென்னைக்கு வரமுடிந்தது. அவர்களைச் சென்னை போலீஸ் ஈஸியாகக் கையாண்டது. அதுவே, கூட்டம் ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தால், சென்னை போலீஸ் தடுமாறிப்போயிருக்கும். அதற்குக் காரணமான ஈஸ்வரமூர்த்தி இப்போது ஹைதராபாத் போலீஸ் அகடமியில் சிறப்புப் பயிற்சிக்காகச் சென்றுவிட்டார். ‘அவர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது’ என்கிறார்கள். மார்ச் மாத இறுதியில் தூத்துக்குடியில் கடையடைப்பு நடந்தபோது, ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத கூட்டம் கூடியது. அதைப்பார்த்த மத்திய உளவுத்துறையினர், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரனிடம் போய், ‘100-வது நாள் போராட்டத்தில் கூட்டம் லட்சத்தைத் தாண்டலாம்’ என எச்சரித்தார்களாம். ஆனால், எஸ்.பி அலட்சியம் காட்டினார் என்கிறார்கள்.’’

‘‘போராட்டம் இந்த அளவுக்குக் கோரமான முடிவுக்குப் போக என்ன காரணம்?”

சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சேர்ந்து, ‘இந்தப் போராட்டங்களை விரைவில் முடியுங்கள்’ என்று மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளார் களாம். ‘இதுபோன்ற போராட்டங்கள் நீடித்தால், அடுத்து வரப்போகும் திட்டங்களுக்கு இதைவிட எதிர்ப்பு எழும். அதனால், போராடும் மக்களுக்கும் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இப்போதே மரண பயத்தைக் காட்டிவிட வேண்டும்’ என்பது மத்திய உள்துறையின் உத்தரவாம். ‘அதன்பிறகுதான் துப்பாக்கிச்சூடுக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன’ என்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் யார், தேவாலயங்களில் முக்கிய ஸ்தானத்தில் இருப்பவர்கள் யார், யாரைச் சுட்டுக்கொன்றால் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்ற விவரங்கள் துல்லியமாக எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் சிலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.’’

‘‘உண்மையில் தூத்துக்குடியில் உயிர்ப்பலிகள் எத்தனை?’’

‘‘அதிகாரப்பூர்வ கணக்கு இப்போதுவரை 13 என்று சொல்லப்படுகிறது. ஆனால், உள்விவரங்களை அறிந்தவர்கள் அது இரண்டு மடங்கைத் தாண்டும் என்கிறார்கள். ‘கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் தாக்கப் பட்டுச் சிலர் உயிரிழந்துள்ளனர். அந்தச் சடலங்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்போது தூத்துக்குடியில் யாராவது காணாமல் போய்விட்டதாகப் புகார் வந்தால், அப்படி புகார் செய்ய வருபவர்களை உடனடியாகப் பாளையங்கோட்டையில் போய்ப் பார்க்குமாறு அனுப்புகிறது தூத்துக்குடி போலீஸ்’ என நமக்கு நெருக்கமான சோர்ஸ் ஒருவர் சொன்னார். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது திரேஸ்புரம் பகுதி மக்கள் சிலர் கூட்டமாக  போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த போலீஸார், உடனடியாக வாகனத்தில் ஏறித் தப்ப முயன்றுள்ளனர். அந்த வாகனத்தைப் பொதுமக்கள் மறித்துள்ளனர். ஆனால், அவர்களை அந்த வேனை வைத்தே ஏற்றிக் காயப்படுத்தியுள்ளது போலீஸ். அப்படி அடிபட்டவர்கள் சிலரை அள்ளிக் கொண்டுபோய் மருத்துவமனையில் போட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரையும் அங்கே போலீஸ் நெருங்கவிடவில்லை. அதனால், அவர்களில் இறந்தவர்கள் யார், காயமடைந்த வர்கள் யார் என்ற விவரமும் வெளியாகவில்லை. அதுபோல, திரேஸ்புரம் பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. வெளியில் வீடு பூட்டியிருந்தாலும், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆட்கள் இருக்கிறார்களா என்று சோதனையிடும் போலீஸ், அந்த வீட்டைச் சூறையாடிவிட்டுத்தான் வருகிறது.”

‘‘கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளிலும் கடும் கெடுபிடிகள் காட்டப்படுவதற்கு என்ன காரணம்?’’

‘‘முதன்மைக் காரணம், இந்தப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குப் பரவிவிடக்கூடாது. சாதி, மத அடிப்படையில் இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட அந்த மாவட்டங்களில் சாதிய ரீதியாகவும், மத அடிப்படையிலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கிடைத்துவிடக் கூடாது. அதுபோல, சாகர்மாலா திட்டத்துக்கு இப்போதே கன்னியாகுமரியில் எதிர்ப்புக் கிளம்பிப் பிரச்னையாகிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டக்காரர்களுக்கும் இந்தக் கலவரத்தைச் சாக்காக வைத்தே உயிர் பயத்தைக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் போலீஸின் திட்டம்” என்றபடி கழுகார் பறந்தார்.

காடுவெட்டி குருவுக்கு திருமாவளவன் புகழாரம்!

காடுவெட்டி குருவுக்கு திருமாவளவன் புகழாரம்!

கோப்புப்படம் சென்னை: அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால், காடுவெட்டி குரு எம்மோடு பணியாற்றியது என்றும் நினைவுகூரத்தக்கதாகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 
உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு, நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காடுவெட்டி குருவின் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 

'வன்னியர் சங்கத் தலைவரும் பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலிவுற்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். 

மறைந்த அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில்
எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

தமிழ் பாதுகாப்பு இயக்கம் செயல்பட்ட காலத்திலும் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 

2011 - தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளே காரணம் என்று நெகிழ்வோடு தெரிவித்து நன்றி பாராட்டினார்.

அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால் அவர் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேர்தல் களங்களில் எம்மோடு நல்லிணக்கமாக பணியாற்றியது என்றும் நினைவுகூரத்தக்கதாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார்
உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

மானசீகன்


மானசீகன்

நேற்று காடுவெட்டி குரு மறைந்த போது தோழர்.திருமாவளவன் மிகுந்த கண்ணியத்தோடு இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த  இரங்கலில் அவருடைய  அரசியல் முதிர்ச்சி தென்பட்டது.

திருமாவின் 90 கள் காலகட்டத்து பேச்சை நான் ரசித்ததில்லை.ஆனால் ஒருவகையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எதிர்வினைதான் அது.அகிம்சையை தன் தாரக மந்திரமாகக் கொண்ட காந்தி'வன்முறையை பிரயோகிப்பதற்கான தார்மீக நியாயம் யாருக்காவது உண்டென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அது இருப்பதாக நான் கருதுகிறேன் ' என்று பேசியிருக்கிறார். அந்த  அளவுகோலில்தான் நான் ஆரம்ப கால திருமாவளவனை மதிப்பிடுகிறேன்.

ஆனால் 2000 க்குப் பிறகு அவர் மிகச் சிறந்த தலைவராக பரிணாமம் பெற்றிருக்கிறார்.நடுநிலை கொண்ட வன்னியர் சமூகத்துப் பெருமக்கள் கூட  தம் மன ஆழத்தில் அவர் மீது மரியாதை வைத்திருக்கின்றனர்.அவர் சாதிப்பெருமிதத்திற்கு எதிராக 'சாதி ஒழிப்பு ' என்ற  ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். திராவிட  இயக்கங்கள் இதனை பொதுத்தளத்தில் பேசுவது வேறு. ஆனால் தான் சார்ந்த சமூகத்திற்காக களப்பணியாற்றி அவர்களை அரசியல் விழிப்புணர்வு  அடையச் செய்து கொண்டே இதனைப் பேசுவது என்பது மிக முக்கியமானது.ஒரு வகையில் கடினமானதும் கூட.தனக்குக் கூடும் கூட்டத்தை தானே கலைப்பதற்கு நிகரானது அது.ஆனால் அவருக்கான கூட்டம் கலைவதேயில்லை.2016 ல் அவர் பிறந்த தின கவியரங்கத்திற்கு கவிமாமணிஅப்துல் காதர் தலைமையில் சென்றிருந்தேன் .காமராஜர் அரங்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த நிகழ்வில்தான் 'மக்கள் நலக் கூட்டணி' உறுதி செய்யப்பட்டது.அங்கு வைகோ பேசுகிற போது'வன்னியர் சமூகத்து இளைஞர்கள் அப்பாவிகள்.உழைக்கும் மக்கள்.அவர்களை சில தலைவர்கள் வழிகெடுக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.அரங்கத்தில் பலத்த கை தட்டல்.அது நல்லிணக்கத்தின் குரல் என்பது மட்டும் அல்ல;பொறுமையும்,அறிவும் கொண்ட ஒரு தேர்ந்த வாத்தியாருக்குக்  கிடைத்த வெற்றி.வைகோவின் நல்லிணக்க உரையைப் புரிந்து கொள்கிற சூழலை திருமா தன் தொண்டர்களிடம் உருவாக்கியிருக்கிறார்.திராவிட  இயக்கத் தலைவர்களின் மனநிலை உயர்ந்ததாக இருந்தாலும் நடைமுறையில் அக்கட்சிகளின் குறுநிலமன்னர்களாகிய மாவட்டச் செயலாளர்கள் சாதி ஒழிப்பை சாத்தியமாக்கவில்லை.சமூக நீதி இடைச்சாதிகளோடு நின்று விட்டது. ஆனால் திருமா, பெரியார், அம்பேத்கர் இருவரையும் உள்வாங்கிக் கொண்டு இதனை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

காடுவெட்டி குரு பேசும் போது அவர் முன்னால் நின்றிருக்கிற கூட்டம் எப்படி வெறுமனே ரசிகக் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கிறதோ அதே நிலைதான் திருமாவிற்கும்.ஆனால் முரட்டுத்தனமான பிள்ளைகளுக்கு கற்றுத் தர வந்திருக்கிற பொறுமை மிகுந்த வாத்தியாரைப் போல திருமா நடந்து கொள்கிறார்.

அவரை உற்றுக் கவனித்தால் தெரியும். இந்துத்துவத்தோடு துளியளவும் சமரசம் செய்து கொண்டதில்லை. திராவிட, பொதுவுடைமை மற்றும் இஸ்லாமிய  இயக்கங்களோடு நல்லுறவு வைத்திருந்தாலும் தன் தனித்தன்மையை சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பயணம் கத்தி மீது நடப்பதல்ல;ரேசர் மீது நடப்பது.

பறையர்களின் உரிமைக் குரலாகக் கிளம்பிய திருமாவளவன் இன்றைக்கு ஒடுக்கப்பட்டோரின் ஒரே நம்பிக்கையாக  உருமாறியிருக்கிறார்.தன் மக்களுக்கான  அதிகாரப் பங்கீட்டைப் பேசுகிற  அதே நேரத்தில் பிற சமூகத்தவர்களோடு பேண வேண்டிய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிறார். அவருடைய சமீபகால பேச்சுக்கள் இடைசாதி மக்களின் மனசாட்சியோடு உறவாடி வருகின்றன. சில  ஆண்டுகளுக்கு முன்னால் உசிலம்பட்டியில் ஏராளமான தேவர்கள் நிறைந்திருந்த கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.அவர் பேசி முடித்த பின் ஒரு பெரியவர் சொன்னார் 'இது பேச்சு; இது மாதிரி ஒரு தலைவன் இப்ப  எந்த சாதிக்கும் இல்லப்பா'.இது திருமாவளவனின் அரசியல் பரிமாணத்திற்குக் காலம் அளித்த மாபெரும்  விருது.

அவர் மட்டும் சில தருணங்களில் பொறுமையாக இல்லாமலிருந்திருந்தால் தமிழகத்தின் அமைதி கெட்டிருக்கும்.ஆனால் இக்கட்டான தருணங்களில்  அவர் மேற்கொண்ட பொறுமை பலரைத் தோலுரித்து அவரது புகழை மேலெழ வைத்திருக்கிறது.

தற்போதிருக்கும் இஸ்லாமிய  இயக்கங்களின் எந்தத் தலைவர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால்  இஸ்லாமியர்களின் பேரன்பைப் பெற்ற பெருந்தலைவராக திருமாதான் இருக்கிறார். கலைஞருக்குப் பிறகு இஸ்லாமியர்கள் வேறு யாரையும் இந்த  அளவிற்கு நேசித்ததில்லை.ஆனால் அந்த  உறவையும் அவர் தேர்தல் கண்ணோட்டமாக மட்டுமே சுருக்கி விடாமல் பரந்த பார்வையோடு கையாண்டு வருகிறார்.சமீபத்தில் பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களுக்கும்,பறையர்களுக்கும் இடையே  கலவரம் நிகழ்ந்த போது திருமா அங்கே சென்றார். பள்ளிவாசலில் அமர்ந்து இஸ்லாமியர்களோடு பேசினார். பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஒரு இஸ்லாமியத் தலைவரைக் குறிப்பிட்டு அடுத்த தடவை வருகிற போது அவரோடு வருகிறேன் என்றிருக்கிறார்.அதற்கு அவர்கள் ' அவர் மீதெல்லாம் உங்கள் மீதிருப்பது  போல் எங்களுக்கு மரியாதை கிடையாது 'என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர்.திருமா அப்படிப்பட்ட  உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

அவருடைய  அரசியல்  உத்திகளை நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதில் தெரியும் நிதானம், தொலைநோக்கு,பிடி கொடுக்காத  இலாவகம், யாரையும் பகைத்துக் கொள்ளாத தெளிவு அனைத்துமே கலைஞரின் குணாதிசயங்கள்.தமிழகத்தில் கலைஞருக்குப் பிறகு தேர்ந்த  அரசியல்வாதி திருமாதான்.நடைமுறைச் சாத்தியங்களின் எல்லைகளை மிகச் சரியாக உணர்ந்து பயணித்தாலும் அதற்காகத் தன் கனவுகளை ஒரு போதும் கை விடாதவர்.

அவர் செயல்பாடுகளையும்,சிந்தனைகளையும் புரிந்து கொண்டு அவரளவிற்கு முன்னே நகர்ந்து ஓடி வருகிறவர்கள் அங்கு குறைவாகவே இருக்கின்றனர்.ஆனால் பல்லாண்டு கால சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இப்போது கோபத்தை மட்டுமே ஒரே ஆயுதமாகக் கொண்டு முன்னேறத் துடிக்கும் ஒரு சமூகத்திற்கு இப்படி  ஒரு தலைவன் வாய்த்திருப்பது மிகப்பெரிய வரம்.என்றோ ஒரு நாள் அந்த சமூகம் பக்குவத்தோடு எழுந்து நிற்கும் போது கண்டிப்பாக வரலாறு 'திருமா திருமா' என்றே முழங்கும்.

தமிழகத்தில் இந்துத்துவத்திற்கான மிகப்பெரிய முட்டுக்கட்டை அவர்தான். கிருஷ்ணசாமியைப் போல் அவர் ஆகியிருந்தால் இன்று மோடியின் செல்லப் பிள்ளையாக இருந்திருப்பார்.ஆனால் தன் அரசியலில் இருந்து விலகாத பயணமே அவருக்கான மரியாதையாக  உடனிருக்கிறது.

திராவிடம், காந்தியம், பொதுவுடைமை போன்ற  மாபெரும் தத்துவங்கள் தமிழகத்தில் மகத்தான தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.ஆனால் சுயம்புவாக ஒரு தலைவன் முளைத்து இந்த மூன்றோடு அம்பேத்கரியத்தையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறான்.தலித்தியத்தில் தொடங்கிய அவர் பயணம் திராவிடத்தை உள்வாங்கிக் கொண்ட இடதுசாரி தமிழ்தேசியமாகப் பரிணமித்திருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னுதாரணமே இல்லாத மாபெரும் சாதனை இது.

தலைவர்கள் இல்லாத வெற்றிடம் என்று அரிதாரம் பூசியவர்கள் வலை வீசுகிறார்கள்.வரலாறு நம் மீது பூசி விட்ட சாதிச் சேற்றிலிருந்து எழுந்து வந்து பாருங்கள்.இதோ நம் காலத்திற்கான ஒரு தலைவன் உருவாகி நிற்கிறான்.
Mohammed Rafeek R