வியாழன், 14 நவம்பர், 2019

தமிழ்நாடு மெட்ராஸ் IIT-இல் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா - "என் தற்கொலைக்கு சென்னை IIT இணை பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் காரணம்"


தமிழ்நாடு மெட்ராஸ் IIT-இல் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா -
"என் தற்கொலைக்கு சென்னை IIT இணை பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் காரணம்"

*Justice for Fathima*

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.

"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு (சால்) அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை (Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள்.  வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.

அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18 வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள்  தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே.?  அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5 நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..

Need Justice for Fathima.

#நேருஜி_அவர்களின்_பிறந்த_தினம் #குழந்தைகள்_தினம்_நவம்பர் 14,


#நேருஜி_அவர்களின்_பிறந்த_தினம்
#குழந்தைகள்_தினம்_நவம்பர் 14,

கல்வியை மீட்டெடுத்த நேரு

இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளில் நேரு முதன்மையானவர். தன்னலமற்ற தலைவர். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமை. எத்தனையோ முக்கியத் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடியபோதும், நேரு என்ற ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.

ஏனென்றால், காந்தி என்ற குழந்தைத்தனம் மிகுந்த முரட்டுக் கொள்கைவாதியைச் சமாளித்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பெரும் தலைவர் நேரு. காந்தியின் உண்மையான சீடர். காந்தியின் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் பாத்திரமானவர். சொல்லப்போனால், ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்தவர்கள் அவர்கள்.

தேசத்தின் விருப்பத் தேர்வு
குழந்தைகளின் மாமா என்பதாலோ ரோஜாப்பூவின் காதலர் என்பதாலோ மென்மையானவர் என்று நேருவை நினைக்க வேண்டாம். இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலால் வியந்து போற்றப்பட்ட உறுதிக்குச் சொந்தக்காரர் நேரு. இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் படேலை காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலர் முன்மொழிந்தபோது, “நீங்கள் வேண்டுமானால் என்னைப் பிரதமராக்க விரும்பலாம். ஆனால், நான் உட்பட இந்தத் தேசத்து மக்களின் ஒரே விருப்பத்தேர்வு நேரு மட்டுமே” என்று படேல் மறுத்தது அதற்குச் சான்று.

நேரு எப்போதும் ஒரு ஜனநாயகவாதியாகவே இருந்தார். இன்றைய முற்போக்குவாதிகளால் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளை நேரு கொண்டிருந்தார்.
சிந்தனைக் களமான சிறைச்சாலை
அளப்பரிய அறிவும் தெளிவான சிந்தனையும் மரபின் வழி அவருக்கு வந்த கொடைகள். தொலைநோக்குப் பார்வையும் நவீனமும் நாகரிகமும் இறுதிவரை அவரை விட்டு அகலாமல் பயணித்தன. பலமுறை சிறை சென்றுள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கவில்லை.

சிறையைக் கண்டு நேரு அஞ்சவில்லை. தன்னையும் தனது நாட்டையும் வடிவமைக்கும் களமாகச் சிறையை அவர் மாற்றினார். சிறையில் இருந்த காலத்தில் அதிகம் படித்தார். தனது சிந்தனைகளைத் தொகுத்து எழுத்தாக்கினார். சுதந்திரப் போராட்டத்துக்கான தேவைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவை வார்த்தெடுத்து வழிநடத்துவதே தனக்கு முன்னிருக்கும் சவால் என்பதை நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். கல்லாமையும் அறியாமையும் நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகள் என அவர் உணர்ந்திருந்தார். அவற்றைத் தரமான கல்வியால் மட்டுமே களைய முடியுமென நம்பினார்.

காந்திய, மார்க்ஸியச் சிந்தனைகள்
கல்வியைக் குறித்த நேருவின் பார்வையில் பாயும் ஒளியாக காந்தியச் சிந்தனைகளும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களும் இணைந்திருந்தன. நேருவைப் பொறுத்தவரை கல்வியறிவு என்பது பகுத்தறிவாலும் அனுபவ அறிவாலும் நேர்மறை எண்ணங்களாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று. மதங்களிலிருந்து கல்வியைப் பிரித்தெடுத்து, குருகுலங்களிலிருந்து கல்வியை விடுவித்து, கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றியதில் நேருவுக்குக் கணிசமான பங்குண்டு.

பகுத்தறிவாளரான நேருவுக்கு மதத்தைவிட விஞ்ஞானத்தில்தான் அதிக நம்பிக்கை இருந்தது. தனது அறிவாலும் அனுபவத்தாலும் தர்க்கத்தாலும் அறிந்தவற்றை மட்டுமே உண்மையென எடுத்துவைத்தார். காந்தியைப் போன்று கொள்கையை வலிந்து திணிக்காமல், தனது கொள்கையை மக்களின் கொள்கையாக வெகு இயல்பாக நேருவால் மாற்ற முடிந்ததற்கு, நேருவின் இந்தப் பண்பே காரணம்.

மதங்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளையும் அந்த மதங்களின் மீதான மக்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தையும் தீவிரமாக எதிர்த்தார். பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட ஒரு விஞ்ஞானப் பார்வையை, உயர்ந்த தரத்திலான கல்வியை அளிப்பதன் மூலம் நேரு மக்களிடம் ஏற்படுத்தினார்.
அதனால்தான் ‘மதச்சார்பின்மையை வலியுறுத்திய நேரு ஒரு மதத்தலைவராக இருக்கவில்லை, ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கையுள்ள ஒரு மனிதராக இருந்தார்’ என டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

உயர்கல்விக்குச் செறிவூட்டிய நேரு
ஐந்தாண்டுத் திட்டங்களைப் போன்று, நம் நாட்டின் வளர்ச்சிக்கு, மாணவர்களின் உயர்கல்விக்கு அவர் முன்னெடுத்த திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்), ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) ஆகியவை நேருவால் உருவாக்கப்பட்டவையே. 1950-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் முதல் ஐ.ஐ.டியைத் தோற்றுவித்தார்.

அதன் பிறகு, 1958-ல் சோவியத் யூனியனின் உதவியுடன் மும்பையில் ஐ.ஐ.டியை நிறுவினார். கான்பூர் ஐ.ஐ.டியை 1959-ல் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவினார். இன்று உலகின் பல உன்னதப் பல்கலைக்கழகங்களுக்குத் தரத்திலும் கல்விச் செறிவிலும் இவை சவால்விடுகின்றன.

இதன் மாணவர்கள் இன்று உலகெங்கும் இருக்கும் பல பெரு நிறுவனங்களிலும் நாஸா போன்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களிலும் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக நிரம்பியிருக்கிறார்கள்.

இந்தியாவின் அடையாளம்
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு, பிறக்கும்போதே வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தார். உலகின் உன்னதக் கல்வி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

காந்திகூட படித்துப் பட்டம் பெற்ற பிறகு, வேலைக்காகத் தென்னாப்பிரிக்கா சென்றார். ஒருவேளை தென்னாப்பிரிக்க ரயில் பயணத்தில் காந்திக்கு அந்த அவமானம் நேர்ந்திராவிட்டால், காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே நிம்மதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால், நேரு அப்படியில்லை. கேம்பிரிட்ஜில் படித்துப் பட்டம் பெற்ற பின்னும், லண்டனில் இருக்க இயலாமல், நாட்டுக்குச் சேவையாற்ற ஓடிவந்தார்.

தன் சொத்துகளை விற்றும் இழந்தும் இங்கே போராடினார். நம் நாட்டின் மனிதவளம் கல்வியில் தேர்ச்சி பெற்றால், உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறிவிடும் எனத் தீர்க்கமாக நம்பினார். அவரது தொலைநோக்குப் பார்வையால் விளைந்த பயன்களின் மேல் ஏறி நின்றுகொண்டுதான் சிலர் நேருவை இகழ்கின்றனர். நேருவை இகழ்வது இந்தியாவையே இகழ்வது போன்றது. ஏனென்றால், சுதந்திர இந்தியாவின் முதன்மை அடையாளம் நேருதான்..