ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!


தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!

ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாத காரணத்தால், அதில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

➤2009 பிப்ரவரி 22-ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிந்தான்.

➤அதே ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலாமாக மீட்கப்பட்டான்.

➤2011 செப்டம்பர் 8-ஆம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான்.

➤2012 அக்டோபர் ஒன்றாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா, உயிருடன் மீட்கப்பட்டான்.

➤2013 ஏப்ரல் 28-ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

➤அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி உயிரிழந்தார்.

➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா, பல மணி போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

➤அதே ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

➤2015ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

➤2018ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டார்.

தற்போது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, குழந்தையை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
Thanks News7

#Surjith #சுஜித்

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144


தமிழரின் வீரத்திருநாள் தீபாவளி ..


தமிழரின் வீரத்திருநாள் தீபாவளி ..

1...அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் மண்ணில் நம்பச்செய்யப்பட்டு  உள்ளது. வட இந்தியாவில், காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள்தான் தீபாவளி என்று கூறப்படுகிறது. இது தமிழர் வரலாற்றுக்கு எதிரானது. தொடர்ந்து படியுங்கள்.....

மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன்.  மிக அதிக நிலபரப்ைப ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இவருடைய ஆட்சியில் இருந்தன. தஞ்சாவூரில் இருந்து பெரும்படையை திரட்டிக் கொண்டு இவர் ஆந்திரா, ஒரிசா, வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே படை நடத்திச் சென்று இமயமலையை அடைந்தார்.

ராஜேந்திர சோழன் இமயம் வென்று திரும்புகையில், கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். பிறகுதான் கங்கையை வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரத்தை உருவாக்கினார். சோழகங்கம் என்ற ஏரியை அமைத்தார். இவை இன்றும் உள்ளன. சோழகங்கம் ஏரியில் குளித்ததை நினைவுகூரும் வகையில்தான், இன்றும் கூட தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சாதாரணமாகவே வீடுகளில் கேட்கப்படுகிறது.

பெரும் வெற்றியுடன் தஞ்சாவூருக்கு 1023 ஆம் ஆண்டு திரும்பிய ராஜந்திர சோழனுக்கு கொள்ளிடம் ஆற்றுக் கரையில் மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. குறுநில மன்னர்கள், அமைச்சர்கள்,  பொதுமக்கள், கலைஞர்கள் என பல லட்சம் பேர் திரண்டு ராஜந்திர சோழனுக்கு வரவேற்பு தந்தனர். ராஜேந்திரன் வெற்றியுடன் திரும்பியதற்கான கல்வெட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில்
திருலோக்கி கிராமத்தில் இப்போதும் உள்ளது. கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஐப்பசி மாத அமாவாசை நாளன்று காலை இந்த வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வீடுகளில் நீராடி, புத்தாடை அணிந்து, தீப ஒளிகளை ஏற்றி, இனிப்புச் செய்து, மாமிசம் சமைத்து கொண்டாடினார்கள். அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அமாவாசை நாள் அதிகாலையில் ராஜேந்திரனின் வெற்றித் திருநாள் வீடுகளில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடப்பட்டு வந்தது.

பின்னர் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் , திருமலை நாயக்கர் ஆகியோர் தமி்ழ்நாட்டை (கி.பி 1500 வாக்கில்) ஆண்டபோது பல்வேறு தமிழ் மரபுகள் மாற்றி அமைக்கப்பட்டன. கோயில் உள்ள ஊர்கள் முன்பு திரு சேர்க்கப்பட்டது. தஞ்சை பெரு உடையார் கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று ஆனது. திருவரங்கம் ஸ்ரீரங்கம் என மாற்றப்பட்டது. தில்லை நகரம் சிதம்பரம் என்றும் திருமுதுகுன்றம் என்பது விருதாசலம் என்று பெயர் மாற்றப்பட்டதும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில்தான். மேலும் விஜய நகர மன்னர்களை அவரது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் சந்தித்து ஆண்டுக்கு ஒரு முறை கப்பம் செலுத்த வேண்டும் . அன்றைய தினம் விஜயதசமி  என்ற திருவிழாவாக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு வெற்றித்திரு நாள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள். இதனால் அதுவரை ராேஜந்திரசோழனின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்த தீப ஒளி விழா,  நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாள் என்ற புதுக்கதை உருவாக்கப்பட்டது. ரஜேந்திர சோழன் வெற்றிப் பயணம் மறைக்கப்பட்டது.

எனவே, தீபாவளி என்பது வடஇந்தியரை தமிழ் மன்னன் கொண்ட வெற்றியின் அடையாளமே தவிர நரகாசூரன் வதை செய்யப்பட்ட நாள் அல்ல, காடு சென்ற ராமன் நாடு திரும்பிய நாளும் அல்ல .

தொலைந்துபோன_தீபாவளிகள்


❤சிறுவயது தீபாவளிகள் ❤

⛱தொலைந்துபோன_தீபாவளிகள்⛱

பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ஊருக்கு ஊர் மாறுபட்டாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. மற்ற பண்டிகைகள் விதவிதமாய் கொண்டாடினாலும் தீபாவளியை மட்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் முறையும் மகிழ்வும் கூட. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கொஞ்சம் சவாலும் கொஞ்சம் பயமும் கலந்தே இந்த பண்டிகை கடந்து போகும். பெரிய அளவில் செலவு வைக்கும் பண்டிகைதான் ஆனாலும் நினைவுகளில் எப்போதும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு தீராத மத்தாப்பைப்போல வெளிச்சங்களால் நிரம்பியவை.


திரியைக்கிள்ளி தீ வைத்தவுடன் சத்தமிட்டு வெடிக்கும் வெடியைப்போல தீபாவளி என்ற சொல்லுக்குள் தான் எத்தனை வெடிகள் எத்தனை சத்தங்கள் புதைந்து கிடக்கின்றன. எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள பல கதைகளையும், நினைத்து நெக்குருக பல நினைவுகளையும் சில தீபாவளிகள் கொடுத்திருக்கும். வளர்ந்து படித்து முடித்து பட்டம்வாங்கி கல்யாணமும் முடித்து குழந்தை பேரன் பேத்திகளையும் பார்த்த பின்பு நினைத்துப்பார்க்கும் தீபாவளிகளை விட பால்யத்தின் பரணில் வெடிக்காத பட்டாசுகளைப்போல தப்பிவிட்ட தீபாவளிகள் தான் கைகளில் ஒட்டிக்கொண்ட மருந்துகளைப்போல பிசுபிசுப்பாய் எப்போதும் நினைவுகளில் இருந்து அகலாதவை.


அவரவர் கொண்டாடி, சந்தோஷித்து, திளைத்து, இழந்து, களைத்து, மறந்து, வெறுத்து ஒதுக்கிய பண்டிகைகளும் , இப்படி கொண்டாட வேண்டுமென  பலநாட்கள் திட்டமிட்டு எல்லாம் வாங்கி குவித்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாளுக்குமுன் எதிர்பாராமல் உறவுகளில் ஒருவர் இறந்துவிட அத்தனை கனவுகளும் நொடியில் உடைந்து துக்கம் வந்து அப்பிக்கொண்ட பண்டிகைகளையும் அவரவர்களால் தான் சொல்லிக்கொள்ளவோ நினைத்துப்பார்க்கவோ முடிகிறது. அப்படி சொல்லிக்கொள்ள பத்தாயிரம் வாலா போல என்னிடமும் பல கதைகள் நீண்டுகொண்டே போனாலும் கேட்பதற்கு காதுகள் இல்லாத காரணத்தால் நினைத்துப்பார்க்கிறேன்.


நிச்சயமாய்… தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வயதுகளில் பட்டாசு சத்தம் கேட்டு அதைவிட சத்தமாய் அழவோ, அல்லது அந்த திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு எழவோ செய்திருப்பேன். ஆனால் இது தீபாவளி , இது பட்டாசு, இதை இப்படி வெடிக்கணும், இந்த மத்தாப்பை இப்படி பிடிக்கணும் என தெரிந்து கொண்ட வயதிலிருந்து இன்று வரை எத்தனையோ தீபாவளிகளைக் கடந்துவந்த பின்னும் அந்த சிறுவயதின் கொண்டாட்டக்கனவுகள் இப்போதும் துளிர்க்கின்றன. பத்த வெச்ச நெலபுருசு போல பொங்கி மேலெழும்புகின்றன சந்தோசங்கள்.


இப்போது காலம் வளர்ந்து நேரம் சுருங்கிவிட்ட காரணங்களால் சின்ன சின்ன குழந்தைகளைக்கூட துணிக்கடைகளுக்கு அழைத்துப்போய் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி போட்டுப்பார்த்து ரெடிமேடாக எடுத்து வந்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பால்யத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை ஆனால் அதைவிட அழகான, வார்த்தைகளால் உணர முடியாத, சொல்லிப் புரியவைத்துவிட முடியாத பல சந்தோசங்கள் கொட்டிக்கிடந்தன. அப்போதெல்லாம் இத்தனை ரெடிமேடு துணிகள் கிடையாது, துணி எடுத்துதான் தைக்க வேண்டும். எங்களிடம் எதுவும் கேட்காமலேயே அவர்களாகவே துணிகளை எடுத்துவந்துவிடுவார்கள். எனக்கும்  தம்பிகும் ..ஒரே நிறத்தால் பேண்ட்டும் வெவ்வேறு நிறத்தில் சட்டை துணியும் வாங்கிவருவார்கள். அக்கா ..தைப்பதென்றால் பட்டுப்பாவாடை-சட்டை, ரெடிமேடெனில் வெல்வெட் ஆடை. ஒருமுறை எங்கள் இருவருக்கும் நல்ல அடர்மஞ்சள் நிறத்தில் பேண்ட் துணியும் எனக்கு சிகப்புகலர் சட்டை துணி அண்ணனுக்கு பச்சைகலர் சட்டை துணியும் வாங்கிவந்தார்கள். அதைக்கொண்டு போய் டெய்லரிடம் கொடுத்து அளவு கொடுக்க நின்ற போது அவர் மேலும் கீழும் ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு “தீபாவளியே உங்களுக்குதான்டா" என்றார், அந்த வயதில் அந்த வார்த்தைகள் வெட்கத்தை மட்டுமே கொடுத்தன. இப்போது அந்த காம்பினேஷனில் உடை அணிந்தால் எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்தால் பல மாடுகளும் சில மனிதர்களும் தெறித்து ஓடும் காட்சி அப்பட்டமாய் கண்களுக்குள் வந்து போகிறது.


துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்த அடுத்த நாளிலிருந்து நினைப்பெல்லாம் டெய்லரிடமே இருக்கும். "இந்நேரம் நம்ம துணியை எடுத்திருப்பாரா? அண்ணனுக்கு முதல்ல தெப்பாரா இல்ல எனக்கா? ஐயையோ சட்டைக்கு என்ன கலர் பட்டன் வைக்கணும்னு சொல்ல மறந்துட்டமே, ஒருவேளை தீபாவளிக்குள்ள சட்டை தைக்கலைன்னா நாம என்ன பண்றது?" என்னும் விதவிதமான கேள்விகள் சங்கு சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும். ஒருவழியாய் துணிகள் தைத்து வீட்டுக்கு வந்ததும் போட்டுப்பார்ப்போம், யாராவது "உன்னுடையதை விட அண்ணனுது நல்லா இருக்குன்னு" சொல்லிட்டா வரும் பாருங்க ஒரு கோவம் வீடு ரணகளமாகும் கடைசியில் அடிவாங்கி என் உடம்பு ரணமாகும்.


வழியும் எண்ணெய் காதுக்குள் குறுகுறுக்க, தலையில் தேய்த்த அரப்பு வாய்க்குள் புகுந்து கசக்க குளித்துவிட்டு வந்து போட்ட புதுத்துணியை எல்லோர்கிட்டையும் காட்டனும்ல, ஒவ்வொரு நண்பர்கள் வீடு சொந்தக்கார வீடாக போய் காட்டிவிட்டு அவர்களின் வாசலில் ஒரு பட்டாசைப் பற்றவைத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் இனிப்பை மென்றுகொண்டே  நோம்பிக்காசு கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தால் குளித்துவிட்டு வந்திருக்கும் பாட்டி நாங்கள் கேட்காமலேயே தன் சுருக்குப்பையிலிருந்து "நோம்பிக்காசு" என்னும் பெயரில் எடுத்து நீட்டும் ஐந்துரூபாயோ பத்துரூபாயோ இனி எத்தனை ஜென்மமெடுத்தாலும் சம்பாதித்துவிட முடியாதவை. அந்த தீபாவளிகள் தான் புகையை விட அதிகமாய் நினைவுகளையும் சத்தங்களைவிட அதிகமாய் சந்தோஷங்களையும் நிரப்பிவைத்தவை. தனித்தனி குடும்பங்களாய் வாழ்வதை பெருமையாய்க் கூறிக்கொள்ளும் இன்றைய வாழ்வில் கைப்பேசியில் வந்துவிலும் ஜிப் பைல்களில் வெடிக்கின்றன டெக்கனாலஜி பட்டாசுகள்.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கு போகும்போது நமக்கு வேண்டியவைகளை எடுத்துப்போட ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருப்பார்களே அப்படியான ஒரு கூடை இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் அந்தக்கூடை முழுவதும் பட்டாசு வந்துவிடும். சிறுவயது என்பதால் வெடிகள் கொஞ்சமாகத்தான் இருக்கும். அண்ணனும் நானும் வெடிகளை பிரித்துக்கொண்டு வெடியில்லாத பட்டாசுகளையும் மூன்றாக பிரித்து அக்காக்கென ஒரு பங்கு கொடுத்துவிடுவோம். அவள் வெடிக்க பயப்படும் நேரங்களில் அதையும் நாங்களே வெடிக்கவும் செய்வோம். துப்பாக்கிகளில் சுருள் கேப்பை போட்டு இப்படி வெடிக்கவேண்டுமென சொல்லித்தரும் சாக்கில் அதையும் பெரும்பாலும் நானே வெடித்துவிடுவேன். முக்கால்வாசியை தீபாவளிக்கு முந்தைய இரவே வெடித்துவிட்டு என் பங்கை தீபாவளி அன்று இரவு எடுத்து அவர்களுக்கு தராமல் வெடித்து அவர்களை வெறுப்பேத்துவதில் வரும் ஆனந்தம் இப்போது எத்தனை கோடிக்கு பட்டாசு வாங்கி வெடித்தாலும் கிடைக்காத ஒன்று.

சரமாய் வாங்கிவரும் பட்டாசுகளை தனித்தனியாய் உதிர்த்து திரிகளைக்கிள்ளி வைத்துக்கொண்டு கையில் பிடித்து தூக்கிப்போடும் ஊசிப்பட்டாசுகள் கொடுத்த உற்சாகத்தை இப்போது வெடிக்கும் பத்தாயிரம் வாலாக்கள் , ஐயாயிரம் வாலாக்கள் கொடுத்துவிடுவதில்லை. மதிய நேரத்தில் தெருத்தெருவாய் சுற்றி வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கிவந்து அதிலுள்ள மருந்துகளை மட்டும் தனியே சேர்த்து ஒரு காகிதத்தின் நடுவில் கொட்டி நாலு பக்கங்களிலும் நெருப்பு வைத்து அந்த நெருப்பு மருந்தின் கிட்டே வரும்போது தொற்றிக்கொள்ளுமொரு பரபரப்பு, மருந்தில் நெருப்பு பட்டவுடன் பொங்கிவரும் "புஷ்வானம்" என இந்த தலைமுறைக் குழந்தைகள் நெருங்கிவிடாத ஒரு சந்தோசத்தின் உச்சியில்தான் மிதந்தன எங்கள் தீபாவளிகள். பட்டாசு வாங்க வசதியில்லாத குழந்தைகள் ஏக்கத்தோடு பார்க்கும் தருணங்களில் அவர்களிடம் கொடுக்கும் சில கொள்ளு பட்டாசுகளிலும் சில மத்தாப்புகளிலும் எங்களைவிட அவர்கள் அதிகமான சந்தோசத்தை உணர்வார்கள். ஒருகாலத்தில் நாங்களும் பட்டாசுகள் வாங்க முடியாமல் தூரத்தில் வெடிப்பவர்களைப் வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்ட தீபாவளிகளும் உண்டு. மிச்சமிருக்கும் பட்டாசுகளை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க வேண்டுமென எடுத்து பத்திரப்படுத்திவிட்டு கார்த்திகை தீபம் எப்போ எப்போ என கேட்டு நச்சரித்த நாட்களின் நினைவுகள் பாம்பு பட்டாசு போல சுருள் சுருளாய் பொங்கிவருகிறது. சிறிய அணுகுண்டு ஒன்றை பற்றவைத்துவிட்டு சத்தத்திலிருந்து தப்பிக்க காது பொத்தியபோது ஊதுபத்தியால் சுட்டுக்கொண்டது , பட்டாசிலிருந்து தெரித்துவிழுந்த நெருப்புத்துண்டு புதுசட்டைக்குள் புகுந்து வயித்தில் காயமானது, எங்கோ பார்த்துக்கொண்டு பிடித்த மத்தாப்பின் மருந்து எரிந்து முடிந்து கையைச்சுட்டு கொப்பளமானது, கல்லுவெடியை வாங்கிக்கொண்டு வெடிக்கத்தெரியாமல் வெடித்து சிதறிய கற்களால் சுரீரென அடிவாங்கியதென எத்தனை எத்தனை நினைவுகள் பிஜிலி வெடிகளைப்போல விட்டு விட்டு வெடிக்கின்றன.



தீபாவளி முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாளன்று தீபாவளிக்கு எடுத்த புதுத்துணியை போட்டுவரலாம் என கொடுத்திருக்கும் சிறப்பு சலுகைக்காகவே  இன்னுமொரு பண்டிகைபோல அந்தநாள் இனிப்பாய் விடியும். தெருவெங்கும் புத்தகப்பை சுமந்துபோகும் பள்ளிக்கூட பிள்ளைகளை அந்த ஒருநாள் மட்டுமே கலர் துணிகளில் பார்க்கமுடியும். அடுத்த தீபாவளி வரும் வரை  கல்யாணம், காதுகுத்து, கோவில் பண்டிகை என காத்திருக்கும் அத்தனை நல்ல விசேஷங்களுக்கும் அந்த புது துணிதான். அதைப்போட்டுக்கொண்டு உருண்டு, பெரண்டு, அழுக்காக்கி, கரையாக்கி அந்த ஒற்றை புதுத்துணியோடு வருடம் முழுவதும் விடியும் இரவுகள் இனி எந்த விடியலிலும் கிடைக்காது.



தீபாவளிக்கு இரண்டுநாள் முன்பே எல்லோருக்கும் சேர்த்து பலகாரங்களும், முறுக்குகளும் சுடும் அத்தைகளையும், சித்திகளையும் இப்போது பார்க்கமுடியவில்லை. ஊருக்குள் வந்து நிற்கும் தள்ளுவண்டியை ஆக்கிரமித்து தங்கள் தாவணி பாவாடைகளுக்கோ சேலைகளுக்கோ மேட்சாக வளையல்கள், கிளிப்புகள், ரிப்பன்கள், ஹேர்பின்கள் என வேண்டியதைத் தேடும் அக்காக்களையும், மருதாணியை அரைத்துக்கொடுத்துவிட்டு சிவந்துகிடக்கும் அம்மிக்கல்லுகளையும் பார்க்கமுடியவில்லை. தீபாவளிக்கு ரிலீசாகும் தங்கள் தலைவர்களின் படங்களில் அவர்கள் உடுத்தும் உடைகளைப்போலவே உடுத்திக்கொண்டு கொத்தாக கிளம்பும் நண்பர்கள் இப்போது தங்கள் குழந்தைகளின் புது துணிகளுக்கு மஞ்சள் வைத்துக்கொடுக்கும் வேலையை சலித்தபடி செய்கிறார்கள். கடந்து வந்திருக்கும் காலம் மிகச்சிறியதுதான் ஆனால் இழந்துவிட்ட சந்தோசங்கள் மிகப்பெரியவை. எப்போதும் வற்றாமல் நினைவுகளில் தேங்கி நிற்கும் இந்த தொலைந்துபோன தீபாவளிகளைப்போல.

இத்தனை வருடங்களைக் கடந்துவந்தபின்னும் இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் பெண்களும் சமையலறைகளும்தான். பண்டிகைகள் வந்துவிட்டால் என்ன சமைக்கணும், யார் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எதைச்செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள், என்ன செய்து அசத்தலாம் என அம்மாக்களின் யோசனைகளிலேயே பாதி தீபாவளி முடிந்துவிடும். காலையிலேயே குளித்து முடித்துவிட்டாலும் சமையலை சாக்காக வைத்து புது சேலையக் கூட கட்டமாட்டார்கள், சிறப்பு பட்டிமன்ற பேச்சுக்களை காதில் கேட்டபடி சமையல் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் கொஞ்சநேரம் கட்டிவிட்டு அவர்கள் தீபாவளியை சமையலறையோடு முடித்துக்கொள்வார்கள். அவர்களைப்போன்ற அம்மாக்களும், பெண்களும் திளைத்துக் கொண்டாடும் விதமாகவும், முடிந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, யாருக்கும் காயமாகாத தீபாவளியாய் இந்த தீபாவளி அமையட்டும்.


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!

பஞ்சமி நிலம் என்றால் என்ன?*

பஞ்சமி நிலம் என்றால் என்ன?*

 ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக,  தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில், கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர்.
இந்த பஞ்சமர்களின் வாழ்க்கை மேம்படவும், சம உரிமைக்கிடைக்கவும், நிலம் அவர்களின் கைகளில் சேர வேண்டும் என்ற உரையாடல், 1890களில் ஏற்பட்டது. குறிப்பாக,  விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டு, மனிதாபிமானமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பஞ்சம மக்கள் வாழ்கின்றனர் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரே 1891-ல் பிரிட்டிஷ் அரசுக்கு 17 பகுதிகள் கொண்ட அறிக்கையை சமர்பித்தார்.
ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரேவிற்கு முன்பாகவே, , திராவிட மகாஜன  சபை நிறுவனரும், ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிறிஸ்துவ மிஷனரி Free of Scotland  சபையை சார்ந்த ஆடம் ஆண்ட்ரு மற்றும் வெஸ்லியன் சபையை சார்ந்த வில்லியம் கௌடி போன்றோரும்  ஒடுக்கப்பட்ட பஞ்சமர்கள் குறித்து பல அறிக்கைகள், மாநாடுகள் வாயிலாக பஞ்சமி நிலம் குறித்து ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட கோரிக்கைகளும் உரையாடல்களுமே பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தது. இதன் எதிரொலியாக, 1891 ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
இந்திய விவகாரங்களுக்காக இங்கிலாந்தில் துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள் என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பட்டியல் இன மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது.  அதன்படி, பட்டியல் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, முதல்  பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது என்பது விதி.