தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி கலைஞர் கருணாநிதி
திராவிட அரசியலின் தோற்றத்தில் தலித்துகளின் பங்கு அளப்பரியது. திராவிட சித்தாந்தம், சொல்லாடல்கள் தலித்துகளிடமே முதலில் தோன்றியது எனலாம். பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலித்துகளிடம் முகிழ்ந்து பின்பு திராவிட அரசியலால் மக்கள் மயப்படுத்தப்பட்டது. திராவிடன் என்ற கருத்துச் சொல்லாடலை அரசியல் பதமாக்கியது தலித்துகளே. எனது நூலான “சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943” என்ற தலைப்பில் குறியீட்டு ரீதியாக 'சூரியோதயம்' என்பது தலித்துகளின் அறிவு மரபையும் 'உதயசூரியன்' என்பது அவர்களின் அரசியல் மரபையும் குறிப்பதாகவே இருக்கும். தலித்துகளின் அறிவியக்கமும் அரசியல் இயக்கங்களும் எவ்வாறு திராவிட அரசியலுக்கான நாற்றாங்கால்களாக இருந்து வந்தன என்பதை தலித்துகளின் இதழியல் வரலாற்றின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு திராவிட அரசியலின் முன்னோடிகளாக இருந்த தலித்துகள் திராவிட இயக்க தோற்றக் காலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அதற்கு முன்பே அவர்களுக்கிருந்த செழுமையான தர்க்க அறிவு அவர்களை இயல்பாகவே திராவிட இயக்கத்தின் முன்கொடி ஏந்துபவர்களாக்கியது. அவர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருந்தனர். திராவிட இயக்கம் தோன்றிய 1920களில் தலித்துகளின் அறிவியக்கம் கிட்டத்தட்ட நூறு வருடப் பாரம்பரியம் கொண்டதாக இருந்தது. பிராமணரல்லாதார் எனும் அரசியல் சொல்லாடலிலும் அதன் கொள்கை முழக்கங்களிலும் நம்பிக்கை வைத்த தலித்துகள் திரள் திரளாக திராவிட இயக்கத்தின் பின் அணிவகுத்தனர். சாதி ஆதிக்க எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கலப்புத் திருமணம் போன்ற கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக செயல்பட்ட தலித்துகள் ஆதிக்கச் சாதியினரின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாயினர். இந்த உழைப்பின் பயனால்தான் அது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து அரசியல் கட்சியாகவும் பரிணமித்தது. திராவிட அரசியலின் அதிகாரத்தை நோக்கிய பயணத்தில், ஏற்கனவே திராவிட இயக்கச் செயல்பாடுகளில் பெரிதும் பங்கெடுக்காத, வட்டார அதிகாரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் முனைப்பு காட்டினர். இதன் விளைவாக தலித்துகள் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். தி.மு.க.வின் அதிகார மிக்க பொறுப்புகளான மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கு தலித்துகள் நியமிக்கப்படுவது அல்லது கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாமல் போனது. ஆரம்பத்தில் வெள்ளாள சாதிகளும் பின்பு இடைநிலை சாதிகளும் தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாலும் தலித்துகள் ஒரே ஒரு தலைமையை மட்டுமே நம்பி கட்சியில் தொடர்ந்து வந்தனர் அவர்தான் கலைஞர் கருணாநிதி.
தமிழகத்தின் எண்ணிக்கைச் சிறுபான்மையான, இந்து கோயில் மரபு ஒடுக்குதலை சந்தித்த ஒரு சாதியில் பிறந்ததும், திராவிட சித்தாந்தத்தை தீவிரமாக பின்பற்றியவருமாக இருந்ததாலேயே தலித்துகளுக்கு கலைஞரின் தலைமையிலான தி.மு.க.வின் மீது தீராத காதல் இருந்தது. எப்போதெல்லாம் தலித்துகள் தி.மு.க.வின் மீது வெறுப்பு கொண்டு வெளியேற வேண்டுமென நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் ஆதிக்கச் சாதியினர் கலைஞரை சாதி ரீதியாக வசைபாடியதை தலித்துகள் நினைவு கூர்ந்து தி.மு.க.வில் நீடித்து வந்தனர். ஒவ்வொரு வட்டாரத்திற்குத் தகுந்தாற் போல கலைஞரின் சாதி விளித்துக் கொள்ளப்பட்டது. அவர் நாவிதர், மேளக்காரர், நாயனக்காரர் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இதுதான் தலித்துகளை அவருடன் இன்னும் நெருக்கமாக்கியது. கலைஞரே ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதும், தலித்துகள் மீது எவ்வாறு இந்து மதம் தீண்டாமையை சுமத்தியதோ அதே போல தேவதாசி மரபையும் சில சமூகத்தினர் மீது சுமத்தியது என்ற ஓர்மையே கலைஞரை தங்களுக்கான தலைவராக தலித்துகள் பார்த்து வந்தனர்.
இடைநிலைச் சாதியினர் தி.மு.க.வின் அரசியல் முகவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டபோது சமூகத்தில் தலித்துகள் மீதான இடைநிலை சாதியினரின் ஒடுக்குதலை தி.மு.க. கண்டும் காணாது போல் இருந்தது என்று விமர்சித்த தலித்துகளே பின்னாட்களில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. தொண்டர்களானார்கள்.
தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு தலித்துகள் சென்றது எம்.ஜி.ஆரின் சினிமா முகமதிப்பிற்காக மட்டுமே கிடையாது. தி.மு.க.வினால் அரசியல் பலம் பெற்ற ஆதிக்கச் சாதியினர் தலித்துகளுக்கு எதிராக வினையாற்றத் தொடங்கியதே தென் மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான தலித்துகள் தி.மு.க.வை விட்டு வெளியேறி அ.தி.மு.க.வை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த இழப்பை இன்றுவரை தி.மு.க.வால் சரிசெய்ய முடியவில்லை. தி.மு.க.வின் கோட்டையாக இருந்த சென்னையை தி.மு.க. இழந்ததும் சென்னை மையத்திலிருந்து தலித்துகள் அப்புறப்படுத்தப்பட்டதும், தென் மாவட்ட ஆதிக்கச் சாதியினர் சென்னையில் அதிகமாக குடியேறியதுமே காரணமாகும்.
தி.மு.க.வில் தலித்துகளின் பங்கெடுப்பை இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, அண்ணா தலைமையிலான தி.மு.க. காலங்களிலிருந்தே (1949) தி.மு.க.விலிருந்து தலித்துகள் அப்புறப்படுத்தல் நடந்தாலும் அரசியல் அதிகாரம் இல்லாததால் இதன் வீச்சு குறைவாக இருந்தது. தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றிய (1967) ஒரு வருடத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பின்பு கலைஞர் தலைமைக்கு வந்த பின்பு முற்பட்ட சாதிகளின் ஆதிக்கம் குறைந்து இடைநிலை சாதிகளின் கைகளுக்கு வந்தது தி.மு.க. 1990 களுக்குள் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளில் மிக சொற்பமான தலித்துகளே எஞ்சியிருந்தனர். தலித்துகளின் மக்கள் தொகைக்கேற்பவோ அல்லது தி.மு.க. வாக்கு வங்கியில் அவர்களின் பங்கிற்கேற்பவோ அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகளில் இடம் வழங்கப்படவில்லை. இது அ.தி.மு.க.விற்கும் பொருந்தும். புதிய தலைமுறை தலித்துகளும் 1990-களுக்குப் பின்பு தலித் அரசியலில் அணி திரள ஆரம்பித்தனர். இது தி.மு.க.விற்குதான் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் தி.மு.க.வில் தலித் தலைமைக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை. இதற்கு கலைஞரை மட்டுமே காரணமாக சொல்லிவிடமுடியாது. தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்களாகவும், மாவட்டப் பொறுப்புகளிலும் இருந்த ஆதிக்கச் சாதியினரின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டே கட்சி செயல்பட்டது. அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட செயலாளருக்கே அதிகாரம் என்பது உள்கட்சி ஜனநாயகமாக பார்க்கப்பட்டாலும் அது சாதியாக செயல்பட்டது என்பதே யதார்த்தம். ஆனால் தி.மு.க.வின் கடைசித் தொண்டர்களாக இருந்த தலித்துகள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை பார்ப்பனியத் தலைமை என்றும் தி.மு.க.வே பெரியார் வழியிலான உண்மையான திராவிடக் கட்சி என்று நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பெருமளவில் பங்கெடுத்த இடைநிலை சாதியினர் தலித்துகள் போன்ற கொள்கைப் பிடிப்புடன் தி.மு.க.வை பார்க்கவில்லை. அவர்கள் அதை அதிகாரம் தரும் ஒரு அரசியல் கட்சியாகவே பார்த்து வந்தனர். பெரியார் வழியிலான கலைஞரின் தலைமைக்குப் பின்பு சித்தாந்த ரீதியாக தலித்துகளைக் கவர தி.மு.க.வில் ஒருவரும் கிடையாது என்பது மிகையல்ல.
#கலைஞர் #தலித்துகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக