வெள்ளி, 15 ஜூன், 2018

இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும்


இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் 

முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும்

இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே,  வாதம் புரியாமல்,  ஏற்கிறேன் இந்தக் கருத்தை முன் மொழிந்தவர்களுக்கு தலையும் வணங்குகிறேன்,

ஆனால்? ???
ஆனால்???

எனக்கு ஒரு ஐயமும் உள்ளது அதற்கு உங்களிடம் தான் தீர்வும் உள்ளது என்பதை நான் அறிவேன் அதற்காகத்தான் இதைப் பதிவிடுகிறேன்

2012 க்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களே இன்று இளைஞர்கள்கள் அதிலும்20 ஆயிரம் பேர்தான் உள்ளோம் இதில் பெண்களில் பாதிப்பேர் ஏற்கனவே திருமணமானவர்கள் அப்படி இருக்கையில் 20 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம் 

இதற்கு முன் உள்ள ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை கடந்துவிட்டார்கள் என்பதால் அவர்களை இணைக்கவில்லை

20 ஆயிரம் குழந்தைகளும் சேரவேண்டும் சேர்க்கவேண்டும் இதில் பல ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர் அதையும் நாம் உணரவேண்டும்

இங்குதான் எனக்கு சில ஐயம் எழுகிறது?

இவர்கள் அனைவரும் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் என்ன மாற்றம் வரும்?

நீங்கள் ஒன்றை உணர வேண்டும் அரசுப்பள்ளி கட்டிடங்களும், ஆசிரியர்களும் தரமாக உள்ளனர் அப்படி இருந்தும் ஏன் அரசுப்பள்ளியில் சேர்க்கை இல்லை??

ஏனெனில் சில ஆயிரங்களில் சம்பாதிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து திறமைகளையும் கற்றுத்தரும் பள்ளியையே தேர்வு செய்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

தனியார் பள்ளியில் என்னென்ன வசதிகள் உண்டு அதை நடத்துபவர்கள் யார்? பட்டியலிடுவோமா?

தனியார்பள்ளி

1.பேருந்துவசதி
2.நடனம், நாட்டிய பயிற்சி,
3.இசைப்பயிற்சி
4.கராத்தே
5.ஹிந்தி
6. சிலம்பப் பயிற்சி
7. தரமான விளையாட்டுப் பயிற்சி அதற்கென ஒதுக்கப்பட்ட மைதானங்கள்
8. Ncc. Nss. போன்ற திட்டம் அதற்கென பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட பல ஆசிரியர்கள் உண்டு

9.பணம்கட்டி படிக்க டியூசன்கள் உண்டு 

10. நாளுக்கேற்ற ஆடை, டை, சூட் கோட் 

11. முக்கியமா பாதுகாப்பு கேட்டை விட்டு வெளியவரமுடியாத பாதுகாப்பு

12. ஸ்மார்ட் கிளாஸ் 

இதெல்லாம்தான் பெற்றோர்களை தனியார்பள்ளியை நோக்கி ஈர்க்கிறது

என்பதை உணரவேண்டும்

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது சற்று அக்கறை அதிகம் பள்ளியில் நடக்கும் மீட்டிங் எல்லாம் வருகிறார்கள் ஆசிரியர்களை கண்டிக்கச் சொல்கிறார்கள்,  ஆனால் அரசுப்பள்ளியில் ??

அரசுப்பள்ளியில்
1.கட்டிடம் உண்டு
2. ஆசிரியர் உண்டு 
3. கழிவறை வசதிகள் சில இடங்களில் உண்டு பல இடங்களில் இல்லை

4. பேருந்துவசதி இல்லை பஸ்பாஸ்உண்டு

5. கராத்தே,  சிறப்பான உடற்கல்வி பயிற்சி, ஹிந்தி,ஸ்மார்ட் கிளாஸ்
ம் இதுல எதுவும் இல்லை

பள்ளிக்கு வாடா னு சொல்லிக் கேட்டாலும் வரமாட்டான் பிள்ளையை கையை பிடித்து இழுத்தாலும் ஏன்டானு கேட்க கூடாது பெத்தவனும் பள்ளிக்கு வரமாட்டான்,  படிக்கலனா திட்டவும் கூடாது,  திட்டினால் ஆசிரியருக்கு சிறைதான் 

இப்படியான சூழலில் இருக்கும் அரசுப்பள்ளியில்

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தான் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கூறுவது சரியா ?

அரசுப்பள்ளிகளின் தரம் உயர்தல் என்பது ஆசிரியர்களின் பிள்ளைகளை சேர்த்தால் மட்டும் வந்துவிடுமா??

இப்படி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம்  தருகிறோம் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மறுக்கிறார்கள் என்று ஆசிரியர்களை சமூகபார்வைக்குள் சிக்கவைத்தவர்கள் யார்?  

அரசு ஏன் 25% ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் அதாவது இந்த ஆண்டுமட்டும் 4 லட்சத்திற்கு மேல் மாணவர்களை தனியார்பள்ளிக்கு பணம் கட்டி படிக்கவைக்க அனுப்பவேண்டும் வேண்டும் 

அட ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு அரசு அனுப்புகிறதே அவர்கள்தான் ஏழை என்றால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார்? பணக்காரர்களா??

20 ஆயிரம் ஆசிரியர்கள் 20 ஆயிரம் குழந்தைகளை ஒருமுறைதான் பள்ளியில் சேர்க்கமுடியும் ஆண்டுக்கு 20 ஆயிரம் குழந்தைகளையா அவர்கள் பெற்று அரசுப்பள்ளிக்கு அனுப்பமுடியும்???

ஆண்டுக்கு 4லட்சம் மாணவர்களை 25% இட ஒதுக்கீட்டில் அனுப்புவதை ஆசிரியர்களும், சங்கங்களும் எதிர்த்தோம் அதை மறைக்க எங்கள் மீது இப்படி ஒரு பழியை அரசு சுமத்துகிறது,  இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?

ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளியில் அரசு சேர்ப்பதற்கு என்ன காரணம்?  

காரணம் அரசியல்வாதிகளே, அவர்களின் உறவினர்களே, அதிகமாக தனியார்பள்ளியை நடத்துகிறார்கள்,

அவர்களின் பள்ளியை காக்கவும் அவர்கள் சம்பாதிக்கவும் அரசுப்பள்ளியையும் ஆசிரியர்களையும் பலியாக்குவது சரியா?

அரசு நினைத்தால் எதையும் செய்யலாமே ஏன் உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை அரசு வேலை வேண்டும் எனில் அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் தான் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை

இதைக்கேட்க எவருக்கும் துப்பில்லை ஆனால் எங்களை கேள்வி கேட்கமட்டும் ஓடிவருவீர்களே 

அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் சேர்க்கும் போது தானாகவே அரசுப்பள்ளியின் தரம் உயரும்,

கலெக்டர் பிள்ளையும், கூலிவேலை செய்பவரின் பிள்ளையும் ஒன்றாக அரசுப்பள்ளியில் பயில்வார்கள்,

அத்துணை அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சத்தான உணவாகும்,

கட்டிடங்களும் கழிவறைகளும் ஸ்மார்ட் கிளாஸ்களும் தானாகவே வந்துவிடும்,

தனியார்பள்ளியில் பணம்கட்டி படிக்கவைத்தவர்கள் எல்லாம் அரசுப்பள்ளிக்கு வந்துவிட்டால்  ,கௌரவத்திற்காக சேர்த்தவர்களும் வந்துவிடுவார்கள், 

இப்போது தனியார்பள்ளிகளின் நிலைமை தற்போது இருக்கும் அரசுப்பள்ளிகளைப் போல் ஆட்கள் இல்லாமல் போவர்,

இதனால் தான் அரசால் இப்படி ஒரு சட்டம் இயற்றமுடியவில்லை 

இயற்றினால் தங்கள் பள்ளிக்கு வருமானம் வராதே,  அட ஆசிரியர்களையாவது கட்டாயம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுவார்களா?  முடியாது?  4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு விற்பதையாவது நிறுத்துவார்களா? இதுவும் முடியாது?  

இதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்கள் ஏனெனில் லஞ்சம் வாங்குபவர்களோடு வெறும் சம்பளம் மட்டுமே வாங்கும் எங்களை மட்டும்தானே குறைகூற அரசியல்வாதிகள் பழக்கி இருக்கிறார்கள் 

அரசுவேலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் எந்த ஆசிரியர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள் உங்களால் பட்டியல் தரமுடியுமா??

வீடு வாங்கியிருப்பார், தன்பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தந்திருப்பார் மீறினால் 1 ஏக்கர் நிலம் வைத்திருப்பார் இதைத்தவிர ஆசிரியரிடம் நீங்கள் பார்த்த வசதி என்ன? 

பட்டியலிடுங்கள் பார்க்கலாம்

ஆசிரியரை அடக்குவது கல்வியை தனியார்பள்ளிக்கு தாரைவார்ப்பதற்கே எதிர்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி கற்க இடமில்லாமல் போகும் அதை முதலில் உணருங்கள்

நாங்களும் தேர்வெழுதியே வந்தோம், அரசுப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உங்களை அரசின் வேறு பணிக்கு மாற்றுகிறோம் என்று அரசு சொன்னால் நானே முதல் ஆளாக ஆசிரியப்பதவியை ராஜினாமா செய்து அரசுப்பணிக்கு செல்வேன் ஆசிரியர்களுக்கு எதிராக பேசுபவர்களே எங்கள் அத்துணைபேரையும் வேறு அரசுப்பணிக்கு மாற்றச்சொல்லுங்கள் 

அரசுப்பள்ளியை தனியாருக்கு விற்றுவிடச் சொல்லுங்கள் அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பணம் கட்டி தனியார்பள்ளியில் தரமான கல்வியை பெற முடியும்,

ஏனெனில் நாங்கள்தானே உங்களுக்கு இடைஞ்சல் அரசும் அப்படித்தானே எங்களை உங்களுக்கு காண்பிக்கிறது,

தயவு செய்து எங்களை அரசு அலுவலகத்திற்கு பணிமாற்றச் சொல்லுங்கள் எங்களுக்கு பள்ளியில் வேலை செய்வதைவிட அரசு அலுவலகத்தில் வேலை செய்வதே எளிமை,  

நான் ஒரு ஆசிரியன் என்று மாணவர்கள் மத்தியில் பெருமையும் மக்களாகிய உங்களுக்கு மத்தியில் வெட்கமும் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக