சனி, 20 ஜூலை, 2019

"புத்தர் - அசோகர் - சுற்றுச் சூழல்."


"புத்தர் - அசோகர் - சுற்றுச் சூழல்."
-------------------------------------------------------
    உலகச் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து முதன் முதலில் அறிவுறுத்தியவர் புத்தர் ஆவார்.

ஆறாண்டு காலம் தீவிரமான மானுடவியல் ஆய்வில் ஈடுபட்ட புத்தர், பல்வேறு முரண்கள் குறித்தும் தம் கவனத்தைச் செலுத்தினார். அதில் ஒன்று சுற்றுச்சூழலின் ஆதாரமான மரங்கள் குறித்ததாகும்.

வெயில், மழை, குளிர், காற்று, நோய் போன்றவற்றிற்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள, புத்தர் மரங்களையும், செடி கொடிகளையும் ஆய்வு செய்து மருத்துவ முறைகளையும் உருவாக்கினார்.

அப்படியான ஆய்வு முறைகளில் ஈடுபட்ட போது, பல்வேறு மரங்களின் அடியில் தங்கி, தன்மூச்சுக்காற்றை ஆய்வு செய்தார். இறுதியாக பகலிலும், இரவிலும் தூயக் காற்றை வெளியிடும் அரச மரத்தடியைக் கண்டுணர்ந்து தன் இறுதி காலம் வரை அம்மரத்தையே பயன்படுத்தினார். புத்தரை அரசர் என்றும் அழைப்பதால் அம்மரத்திற்கும் அரச மரம் எனப் பெயராயிற்று.


அசோக மன்னர் மாபெரும் கலிங்கப் போருக்குப் பின் புத்த நெறியைத் தழுவினார் எனப் படித்திருப்போம். ஆனால், ஏன் தழுவினார், எப்படித் தழுவினார் எனத் தெரியாது.

கலிங்கப் போரில் ஏறத்தாழ ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஒன்றரை லட்சம் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்; ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்தனர்.

அசோக மன்னர் பிணங்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்து துடிக்கும் சதைப் பிண்டங்களுக்கும் நடுவே நடந்து வருகிறார். பிள்ளைகளை இழந்த தாய்மார்களும், கணவனை இழந்தப் பெண்டிரும் கதறி அழுகின்றார்கள்.

அவர்களின் சாபக் குமுறல்களைக் கேட்டவாறே இரத்த வாடையோடும், பிணவாடையோடும் மனம் விம்ம நடந்து வருகிறான் அசோகன். அவனது உள்ளம் துடிக்கின்றது; உயிரும் துடிக்கின்றது.

அப்படியே போர்க்களம் கடந்து , அடர்ந்து செழித்த வனத்தின் நடுவே நடந்து, அங்கே  அமைந்துள்ள ஒரு புத்தத் துறவியின் குடிலை வந்து அடைகின்றான்.

தியானத்திலிருக்கும் துறவியின் பாதம் அருகே மண்டியிட்டு அசோகன் அமர்ந்து இருப்பதைக் கண்ட, துறவியின் சீடர்கள் அதிர்ச்சியடைந்து, திகைத்தவாறு நிற்கின்றனர்.

அசோகன் முறையிடுகின்றான்: "லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று விட்டேன். என் நாசியில் வீசும் இரத்த வாடை என் மனதைச் சிதைக்கின்றது. என் பாவம் போக்க வழி சொல்லுங்கள்" என்கின்றான்.

"உன் வாள்முனையை விட, உன் வாய் முனைக்கு வலிமை அதிகம் அசோகா.. உயிர்களை எடுப்பவன் அரசன் அல்ல. உயிர்களைக் காப்பவனே அரசன். " என்று துறவி கூறுகின்றார்.

"அசோகா.... எத்தனை உயிர்களைக் கொன்றாயோ, எத்தனை உயிர்களை வதைத்தாயோ, அதற்கு மூன்று மடங்கு மரங்களை, நீ ஆளும் தேசம் முழுவதும் உயிர்ப்பித்து உருவாக்கு. அவை எண்ணிலடங்கா உயிர்களை உருவாக்கி, எண்ணிலடங்கா உயிர்களுக்கு அடைக்கலமாகும். இதுவே உன் பாவத்தை நீர்க்கச் செய்யும் " என்று துறவி அறிவுறுத்துகிறார்.

அவரது சொல்லுக்கிணங்க நாடு முழுவதும் பயனுறு மரங்களை நட்டு எண்ணிலடங்கா உயிர்கள் உவக்க, உவக்க அரசாட்சி செய்தான்.


புத்தரின் நினைவாக தம்மக் கருத்துகள் நாடு முழுவதும் பரப்பப்படுவதை சுட்டும் விதமாக தம்மநெறி சக்கரம் சுழலுவது போன்ற ஒரு கல் தூணை நட்டு, 'சக்கரவர்த்தி' எனும் பெயர் பெற்றான்.

இன்றும் உலகம் முழுவதும் தம்மச் சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதற்குச் சான்றாய், உயிர்களை உயிர்ப்பிக்கும் நிலையும், காக்கும் நிலையும் தொடர்கின்றன.

உலகச் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து முதலில் அறிவுறுத்தியவர் புத்தரும், புத்த தம்மமுமே.

                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக